Saturday, April 11, 2009

ஊசலாடும் தம்முயிரை பாதுகாக்க புலம் பெயர் தமிழர்களை ஒக்ஸிஜனாகப் பயன்படுத்தும் புலிகள். -எஸ் எஸ் கணேந்திரன்-



சகல கட்டுமானங்களையும் தன்னகத்தே கொண்டு ஒரு நடைமுறை அரசாங்கத்தை தாம் நடாத்திவருவதாக இத்தனை காலமும் கதையளந்த புலிகள் கழுதை தேய்ந்து கட்டெறும்காகிய மிக மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ள வேளையிலும் வழமையான வாய்ச்சவாடல்கள் மூலம் தமது தலைவர் தொடர்ந்தும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் திடசந்தர்ப்பம் பூண்டுள்ளதாகவும், தமிழீழம் கிடைக்காது என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தால் எப்போதே அவர் போராட்டத்தை கைவிட்டிருப்பார் என்றும், புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளாரும் முன்னாள் இலங்கை அரசாங்க பொலிஸ் கொஸ்த்தாப்புமான பா நடேசன் கருத்துத்தெரிவித்து வருகின்றார்.

"புலிகளுக்கு பின்னான காலம் என்று ஒன்று வரவே வராது" எனக்கூறியிருக்கும் நடேசனின் கருத்தை அவதானிக்கும்போது மிஞ்சியிருக்கும் புலிகள் தற்போது மக்கள் பாதுகாப்பு பிரதேசத்திற்குள் நுழைந்திருப்பதன் காரணம் தாம் அழிக்கப்படும்போது வன்னிக்குள் சிக்குண்டு தவிக்கும் சகல மக்களையும் தாமே அழித்துவிட்டு தாமும் தற்கொலை செய்யும் பாதகமான திட்டத்தினை புலிகள் கொண்டுள்ளார்களா? என சிந்திக்கத்தோன்றுகிறது.

மக்களை மனிதக் கேடயங்களாக பயன் படுத்துவது புலிகளுக்கு புதிதான ஒரு விடயம் அல்ல.
கருனா, பால்ராஜ் போன்றவர்களின் பின்னால் புலிகளின் மிக முக்கிய தளபதியாக விளங்கிய தீபன் உட்பட பல முக்கிய தளபதிகள் பலியான பின்னர் எஞ்சியிருக்கும் தலைவர்களின் உயிர்கள் தற்போது ஊசலாடத் தொடங்கியிருக்கும் நேரத்தில் புலம் பெயர் தமிழர்களுக்கு உருக்கொடுத்து அவர்களின் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் தமது சுவாச ஒக்ஸிஜனாக மாற்ற பிரபாகரனும் பொட்டம்மானும் கொடுத்த கட்டளைகளை புலம் பெயர் புலிகளின் நிதி சேகரிபாளர்கள் செவ்வனே செய்து வருகின்றார்கள்.

புலிகள் இயக்கம் உலகின் பல நாடுகளினால் தடை செய்யப்பட்ட பின்னர் பல்வேறு பெயர்களில் தலைமறவாக நிதிசேகரித்த புலிக்கூட்டத்தினர் தற்போது இலங்கையின் அரசியல் நிலைப்பட்டை அறிந்திராத இளம் சிறுவர்களை முன்னிலைப்படுத்தி இளையோர் அமைப்பு என அழகான பெயரைச்சூட்டி சில ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் முன்னால் விட்டு பின்னுக்கு நின்று மகுடி ஊத சிறுவர்களும் நன்றாகவே ஆடுகின்றார்கள்.
மகுடி ஊதுவதனாலும் ஆடுவதனாலும் உண்மையிலேயே வன்னிக்குள் பரிதவிக்கும் தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் எண்றால் அதில் தவறிருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் தமது இருப்பிற்ககா உடுக்க உடையிண்றி உண்ண உணவிண்றி மருத்துவ வசதிகள் இன்றி வாடி வதங்கும் அந்த அப்பாவி மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் தடுத்து வைத்து மனித நாகரீகமற்ற அடக்குமுறை சித்திரவதையை மேற்கொள்ளும் புலிகளின் தரம் கெட்ட செயற்பாடுகளை வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வந்துள்ள மக்கள் கண்ணீர் மல்லக தெளிவுபடுத்திய பின்னரும் பிரபாகரனுக்கும் பொட்டம்மானுக்குமாக மகுடி ஊதுவதையோ ஆடுவதையோ இன உணர்வுள்ள எந்தத் தமிழனும் ஏற்றுக்கொளப்போவதில்லை என்பது தெளிவான உண்மை.

தமிழீழ மக்களின் விடுதலைக்காக உலக நாடுகளில் நடாத்தப்பட்ட போராட்டங்கள் முடிவுக்கு வந்து இப்போ வன்னி மக்களுக்காக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிண்றன ஆனால் அந்த போராட்ட நிகழ்வுகளில் அந்த அப்பாவி மக்களுக்காக முன்வைக்கப்படும் வாசகங்களாக

பனை மரத்தில வெளவாலா -
புலிகளுக்கே சவாலா
முல்லைத்தீவில் ஆமியா -
புலிகள் என்ன கோழையா?
எங்கள் தலைவன் பிரபாகரன்
வேண்டும் வேண்டும் -
தமிழீழம் வேண்டும்
ராஜபக்ஸ் - செத்துப்போ

இந்த வசனங்கள் தான் வன்னி மக்களின் விடுதலைக்காக புலம் பெயர் புலிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது இத்தகைய போராட்டங்கள் யாருக்கா எதற்காக முன்னெடுக்கப்படுகின்றது என்பதை அறிவுள்ள எவரும் புரிந்துகொள்வார்கள் தமிழீழம் கேட்டதிலோ அல்லது போராட்டத்தை முன்னெடுத்ததிலோ எந்த வித தவறுமில்லை என்பது எனது கருத்து. காரணம் இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் சிங்கள மேலாதிக்க வர்க்கத்தினரின் சொல்லமுடியாத் துயரங்களை சந்தித்தது தமிழினம் என்பதை தமிழரோ சிங்களவரோ அல்லது இஸ்லாமியர்களோ மறுக்க முடியாது.
சகல விதமான சாத்வீக போராட்டங்கள் தோல்வி கண்டன எத்தனையோ ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்தரவதைகளுக்கு முகம் கொடுத்தார்கள். இதன் பிரதிபலிப்பே தமிழீழ விடுதலையில் ஆயுத போராட்டம் பெரு உருவம் எடுக்க காரணகர்த்தாவாக அமைந்திருந் தது

ஆனால் தமிழ் மக்களுக்கு தேவையான விடுதலையை வென்றெடுக்கப்புறப்பட்ட பிரபாகரன் தோழர் சுந்தரத்தின் கொலையில் ஆரம்பித்து 85 காலப்பகுதியின் பின்னர் அனைத்து மாற்றியக்கங்களையும் அழித்து மிக மோசமான முறையில் சகோதரப்படு கொலைகளை அரங்கேற்றத்தொடங்கிய காலமே வீச்சோடு எழுந்த விடுதலைப்போராட்டம் விளையாப்பயிராக மாறத்தொடங்கியது. மாற்றியக்க உறுப்பினர்கள் சிந்திய குருதியும் அவர்களது குடும்பத்தார் விட்ட கண்ணீரும் கல்விமான்கள் அரச உத்தியோகத்தர்களின் சாபங்களும் இன்று பிரபகரன் உட்பட புலிகள் அனைவரையும் சுட்டெரிக்கத்தொடங்கி அதுவே புலிகளின் முடிவாக மாறிவிட்டது.

எனவே தற்போது புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் இத்தகைய போரட்டங்கள் உண்மையாக வன்னி மக்களுக்கானது என்றால் புலம் பெயர் தமிழர்கள் செய்யவேண்டிய விடயம் எல்லோரும் ஒன்றுகூடி இத்தனை காலமும் எமது இனத்தினை அழித்தது போதும் மிஞ்சியுள்ள எம்மக்களையாவது நின்மதியாக வாழ மக்கள் பாதுகாப்பு பிரதேசத்தில் எந்த நேரத்திலும் அவர்களுகு எதுவும் நிகழலாம் எண்ற அச்சத்துடன் தவித்துக்கொண்டிருக்கும் அப்பாவி மக்களை உடனடியாக வெளியேற அனுமதி என்ற கோரிக்கையை புலிகளிடம் முன்வைத்தால் அது வரவேற்கப்படும். அதை விடுத்து இன்றோ நாளையோ தப்புவதா அல்லது பொட்டாசிம் பெரி சயனைட்டா என்ற பீதியுடன் உயிர் ஊசலாடும் புலிகளின் தலைவர்களுக்கு புலம் பெயர் நாடுகளில் இருந்துகொண்டு ஒக்ஸிஜன் கொடுப்பதானது அன்று புலி தமிழ் இனத்திற்கு செய்த கொடுமையைவிட புலம் பெயர் தமிழர் செய்வதே வன்னி மக்களுக்கு மிகப்பெரிய கொடுமை என்பதை வரலாறு சொல்லியே தீரும்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com