Friday, April 3, 2009

வெடிகுண்டு நிபுணர் பரமானந்தன் மாஸ்ரர் உட்பட லாவுகல ஹோங்காகல பிரதேசத்தில் 13 புலிகள் பலி.

யால மற்றும் புத்தள பிரதேசக் காடுகளில் மறைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினா,; இன்று (03) காலையில் அம்பாறை, பாணமைப் பிரதேசத்தில் புலி உறுப்பினர்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இன்று காலையில் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்குமிடையே ஏற்பட்ட மோதலின் போது விசேட அதிரடிப் படையினருக்கு எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லையென உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர்களில் வெடிகுண்டு நிபுணரான ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த அ 0012 என்ற இலக்கத்தைக் கொண்ட பரந்தாமன் மாஸ்டர் என அழைக்கப்படும் கந்தையா சரவணநாதன் அடங்குகிறார். அதிரடிப் படையினரின் தாக்குதலில் இரு பெண் புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணரான பரந்தாமன் மாஸ்டர் அம்பாறை, மல்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் இவர் 1995 ஆம் ஆண்டுகளில் புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.


விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் 'இலங்கை நெற்று'க்குத் தகவல் தருகையில், புத்தள மற்றும் மொனராகலை வனப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் வசிக்கும் அப்பாவிப் பொது மக்கள் அண்மைக் காலமாக பயங்கரவாதிகளின் பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாகக் கூறினார். கடந்த காலங்களில் தமது விவசாய நிலங்களுக்குச் சென்றவர்களும் காடுகளுக்கு விறகு வெட்டச் சென்றவர்களும் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டும் தாக்குதலுக்கு இலக்காகியும் உள்ளனர். தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட அதிரடிப் படையினர் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் விசேட செயல் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்டத் தளபதி ராம் தலைமையிலான 40 பேர் கொண்ட குழுவொன்றோ இந்தப் படுகொலைகளைச் செய்து வருகின்றன. இவர்களில் 13 பேரே இன்று காலையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





No comments:

Post a Comment