Monday, March 25, 2024

சிறுபாண்மையினனுக்கு இந்நாட்டின் பிரதமராக , ஜனாதிபதியாக வரமுடியாது என்ற உணர்வு வருகின்றதென்றால் பிரச்சினை இருக்கிறதாம். கனடாவில் அனுர

நேற்று முன்தினம் 23.02.2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடா வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நாடாத்தியிருந்தார். கனடா வரலாற்றில் மிகப்பெரும் திரளான சிங்கள , தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்த அச்சந்திப்பில் பேசிய அவர் இலங்கையில் சிறுபாண்மையினரின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை அனுபவ ரீதியான உதாரணங்களுடன் உணர்த்தினார். அவர் அங்கு பேசுகையில்,

திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில் சிலகலமாக அமர்ந்திருந்த காலத்தில் எனது இருகரங்களையும் பற்றிப்பிடித்து இப்படி சொன்னார்: 'அனுர, நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன்.'

திரு. ஜெயராஜ் பர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார்: 'அனுர என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போக கூடியது ஒரு அமைச்சர் பதவிதான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான்' என்று சொன்னார்.

அவருடைய இனத்துவ அடையாளத்தின் காரணமாக தன்னுடைய வாழ்க்கையில் அடையக்கூடிய ஆகக்கூடிய உயரம் இவ்வளவுதான், என்று அவர் நினைக்கின்றார் என்றால் அந்த உணர்வின் பின்னால் தேடவேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்றும் அவை எந்த விதத்திலும் நியாயமற்றவை என்றும் கூறினார் அனுர குமார திஸாநாயக்க.

சந்திப்பின்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கும் கேள்விகளுக்கும சந்தர்ப்பமளிக்கப்பட்டிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் சிரேஸ்ட ஊடவியலாளரான திரு. மனோரஞ்சன் தெரிவித்த கீழ்காணும் கருத்துக்கு ஒரு நீண்ட நெடிய பதிலளிக்குபோதே மேற்கண்ட விடயத்தினை அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

மனோரஞ்சனின் கருத்து,

கனடாவுக்கு வருகை தந்த தோழர் அநுர குமாரவை மாற்றுத் தமிழ் அரசியல் சமூகத்தின் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.

முதலாவது நானும் நாங்களும் இலங்கையில் எம்மைத் தமிழர்களாக உணர்ந்ததும், உணர்வதும் ஒரு தவறுமல்ல/குற்றமுமல்ல . அதேபோல்தான் இஸ்லாமியர்களும் தம்மை இஸ்லாமியர்களாக உணர்வதும் தவறுமல்ல/குற்றமுமல்ல. சிங்கள பவுத்தவர்களுக்கும் அப்படித்தான். அவர்கள் தம்மை சிங்கள பவுத்தர்களாக நினைப்பதும், உணர்வதும் தவறுமல்ல/ குற்றமுமல்ல. இதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என நினைக்கிறோம்.

ஆனால் இலங்கையில் நாம் தமிழர்கள் என்றும், முஸ்லிம்கள் என்றும் சிங்களவர்கள் என்றும் பிரிந்து நின்று எம்மை நினைக்கவும் உணரவும் தூண்டிய தவறைச் செய்ததது யார்? யார் அந்த ஆட்சியாளர்கள்? ஏன் அப்படி செய்தார்கள்? என்பதெல்லாம் உங்களுக்கும் எங்களுக்கும் இப்போது நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் செய்த அந்த மாபெரும் அநியாயத்திற்கு நாம் எவ்வளவு இழப்பீடு கொடுத்திருக்கிறோம் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். நம்மில் இரண்டு தலைமுறையினருக்கு இன்னும் அந்த இரத்த வாடையை உணர முடிகிறது. கடந்த காலத்தின் தாக்கம் எமது மூன்றாம் தலைமுறையினரின் இதயங்களிலும் உணரப்படுகிறது. ஆனால் இன்று, அதை உங்களால் மாற்ற முடியும் என்று நாமும் நினைக்கிறோம். 1948 இல் செய்ய வேண்டியதை இன்று 2024 இல் செய்ய வேண்டும் என்று நாங்களும் நம்புகிறோம், ஆம் ஒரு முறை முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக, இலங்கையின் முழு அரசியல் கலாசாரத்தையும் முற்றாகச் சீரழித்த இந்த மேல்தட்டு வர்க்கப் பிரபுத்துவ ஆட்சி ஒரு முறையாவது உடைக்கப்பட்டு, சாதாரண மனிதர்களின் இதயத்துடிப்பை உணருகின்ற, மானுட ஈரம்கொண்ட அரசியல் இலங்கைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அது உங்களாலும் முடியும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

மூன்றாவதாக, இலங்கை மக்கள் இன்று உண்மையான ஒரு மாற்றத்தைக் கோருகின்றனர். 2022ல் வீதிக்கு வந்த மக்களின் அரகலய போராட்டம் அந்த உண்மையை எமக்கு உணர்த்தியதாக நாங்கள் நம்புகின்றோம். அதனால்தான், சுதந்திரம் அடைந்து 75 வருடங்களின் பின்னர், உங்கள் ஐம்பது வருடகால அரசியல் பயணத்தில் முதன் முறையாக இலங்கையின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் மாற்ற மக்கள் இன்று உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால்தான் முன்பை விட இன்று மக்கள் உங்களை நோக்கி வருவதை நாங்கள் காண்கிறோம். உங்களின் பொதுக்கூட்டங்களுக்கு சுனாமியைப் போல திரண்டு வரும் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்களின் அமைதியான கண்களில், அமைதியான முகங்களில் மற்றும் அமைதியான இதயங்களிலிருந்து ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞயை நீங்கள் பெறுகிறீர்கள். அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நாம் நம்புகிறோம். மக்களின் மவுனமாகிப்போன அந்த இதயங்களில் புதைந்து கிடைக்கும் வலியிலிருந்து வரும் செய்தியையும் அதன் உணர்வையும், துடிப்பையும் நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதை நீங்கள் சரிவரப் புரிந்து கொண்டால் அது உங்களுக்கும் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.- நன்றி.

பதிலளித்து பேசிய அனுரகுமார திஸாநாயக்க,

எங்கள் நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியல். எங்கள் நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மக்களிடையே மோதல்கள் இருக்கவில்லை. நான் தம்புத்தேகமயைச் சேர்ந்தவன். எங்களுடைய புகையிரத நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு தமிழர். நான் போன வைத்தியசாலையில் வைத்தியர் ஒரு தமிழர். எங்களுடைய தபால் கந்தோரில் தபால் அதிபராக இருந்தவர் தமிழர். என்னுடைய அப்பா ஒரு பொறியியல் துறை தொழிலாளி. அங்கிருந்த பொறியாளரும் தமிழர் திரு. கனகரட்ணம். நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாக வாழ்ந்தோம். எங்களிடையே அப்படி ஒரு மோதல் இருக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்கும் எனக்கும் திரு. கனகரட்ணம் அவர்களை ஒரு வெளி மனிதராக உணர முடியவில்லை. தமிழ் வைத்தியரிடம் செல்லுகின்ற பொழுது ஒரு தமிழ் வைத்தியரிடம் நான் மருந்து வாங்க வந்திருக்கிறேன் என்ற உணர்வு ஒரு காலமும் வந்ததில்லை. எங்களுடைய சமூகத்தில் இனவாதம் இருக்கவில்லை. தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். அதிகமான திருமணங்கள் சம்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் அவர்களுடைய தைப் பொங்கல் விழாக்களுக்கு சென்றிருந்தோம். அவர்கள் எங்களின் வெசாக் பண்டிகைக்கு வந்தார்கள். அவ்வாறாக எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கலாச்சார தொடர்புகளும் கூட இருந்தது. ஆனால் எங்களுடைய நாட்டின் அரசியல்வாதிகள் எல்லாவிதத்திலும் தோல்வி கண்டவர்களாக இருந்தார்கள். எல்லாவற்றிலும் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் எப்போதும் தமது வெற்றிக்கு, தமக்கான வாக்குகளை பெறுவத்ற்கு குறுக்கு வழியை நாடுவார்கள் என நான் முன்னரே சொல்லியிருந்தேன்.

நாங்கள் பிறந்த சமூக பின்னணியின் அடிப்படையில் எங்களுக்குள் ஒரு கலாச்சாரம் பண்பாடு என்பது எங்களுக்குள் இருக்கின்றது. நான் ஒரு சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறக்கின்ற பொழுது எனக்கு நல்லது கெட்டது என்பதைச் சொல்லித் தருவது அந்த ஆகமத்தில் உள்ள கதைகளும் விளக்கங்களுமே. இந்த ஆகமக் கதைகளில் இவ்வாறாக இருக்கின்றன மகனே என்று எனக்கு சிறுவயதில் அது சொல்லித் தரப்படுகிறது. எங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் வருகின்ற பொழுது அதில் தலை தலையிட்டு தீர்த்து வைப்பவர் எங்களுடைய பண்சலையில் இருக்கும் பௌத்த பிக்குவாக இருப்பார். எங்களுடைய கிராமத்தில் பெரும் பண்டிகையாக இருந்தது எங்கள் கிராமத்து பண்சலையில் நடக்கும் நிகழ்வுகள்தான். எங்களுடைய பாடசாலைகளில் பௌத்த தர்மத்தை எங்களுக்கு போதித்தவர் எங்களது கிராம பண்சலையின் பௌத்த பிக்கு ஆவார். அப்போது என்ன நடக்கிறது? எனக்குள் சிங்கள பௌத்த பண்பாடு ஒன்று என் ஆன்மாவோடு சேர்த்து வளர்கின்றது.

ஒரு இஸ்லாமியரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நல்லது கெட்டது அல் குர்ஆனில் இருந்து போதிக்கப்படுகிறது. அவர் பிறந்ததிலிருந்து, வாழ்ந்து, அவர் மறைந்து, அவரின் இறுதிச் சடங்கு வரை அவருடைய வாழ்க்கை முறை அவர்களுடைய அல் குரானில் இருக்கும் நபிகள் நாயகத்தினுடைய திருமறைக்கூடக போதிக்கப்படுகிறது. குறிப்பாக அதிலிருக்கும் ஆயிரத்து அறுநூற்று அறுபத்தி ஆறு உபதேசங்கள் ஊடாக... அப்படித்தானே? அதே நேரம் அவர்களுடைய பண்டிகையாக இருப்பது ராமசான் பண்டிகை. அவருடைய கலாச்சாரமும் அதை ஒட்டியே வளர்க்கப்படுகிறது. அதாவது ஒரு இசுலாமியராக. ஒரு முஸ்லீமாக வளர்க்கப்படுகிறார்.

ஒரு கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவரை பாருங்கள். அவருக்கு வாழ்க்கையில் நல்லது கெட்டது போதிக்கப்படுவது ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கூடாக போதிக்கப்படுகிறது. அவர்கள் சிறு வயது முதல் ஆலயத்தில் பாடல்கள் பாட அழைக்கப்படுகிறார்கள். அவருடைய ஊரில் பெரும் திருவிழாவாக இருப்பது அவருடைய ஆலயத்தோடு சேர்ந்த பண்டிகைகள். அவர்களுக்குள் அத்தகைய ஒரு பண்பாடு வளர்க்கப்படுகிறது.

நாங்கள் தொழில் ரீதியாக பொறியாளராக, தொழிலாளர்களாக, வைத்தியர்களாக இருப்போம். பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுகிறோம். அது எங்களுடைய தொழில். ஆனால் எங்களுடைய ஆன்மாவோடு ஒட்டிய பண்பாடு நாங்கள் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தோடு சேர்ந்தே வளர்க்கப்படுகின்றது. அது எமக்குள் அப்படியே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? தங்களுடைய எல்லாப் பணிகளும் தோல்வி கண்டதன் பின்பு இந்த எங்கள் ஆன்ம பண்பாட்டை கிண்டி எடுத்து தூண்டி விடுவார்கள். 'வாருங்கள் பெரும் ஆபத்து நிகழப் போகின்றது... எங்களுடைய தேரவாத பௌத்ததிற்கு என்ன நடக்கப் போகுது என்று பாருங்கள்.... எங்களுடைய நாட்டுக்கு என்ன நடக்க போகுது என்று பாருங்கள். 2050 ஆண்டில் முஸ்லிம் மக்கள் எல்லாம் பெரும்பான்மை இனமாக மாறப் போகிறார்கள்’. இப்படியாக அந்த அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இந்த ஆன்ம பண்பாட்டு உணர்ச்சியை தூண்டிவிடுவார்கள். ஏன்?

அவர்களால் எமது நாட்டின் பொருளாதாரத்தை பற்றி பேசமுடியாது, நமது நாட்டின் கல்வி வளர்ச்சியை பற்றி பேச முடியாது, நமது நாட்டின் அபிவிருத்தியை பற்றி, நமது நாட்டில் ஜனநாயகத்தை பற்றி பேச முடியாது. நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு முறை பற்றி அவர்களால் பேசவும் முடியாது. நாட்டில் நடக்கின்ற குற்றச்செயல்களை குறைப்பது குறித்து அவர்களால் பேச முடியாது. நாட்டில் ஒரு அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு செய்ய வேண்டியது என்ன? செய்திருப்பது என்ன? என்பதைப் பற்றி அவர்கள் பேச முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் அது எல்லாவற்றிலும் அவர்கள் தோல்வி கண்டிருக்கிறார்கள். அந்த தோல்விகளை எல்லாம் அப்படியே இருக்க அவர்கள் என்னத்தைப் பற்றி பேசுகிறார்கள்? ‘இனத்தைப் பாதுகாக்க வேண்டும்...’ ‘எமது இனம் ஆபத்துக்குள் சிக்கியிருக்கிறது’. இப்படியான சுலோகங்களை 2015 ந்தாம் ஆண்டுக்கு பின்னரும் நாம் கேட்டோம். சில சுலோகங்களை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ‘தேசியம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது’ என்ற சுலோகம் வந்தது. இரண்டாவது, ‘மீண்டும் புலிகள் புத்துயிர் பெற விரும்புகிறார்கள்’ என்ற சுலோகம் வந்தது. அடுத்தது, 2050தாம் ஆண்டு ஆகின்றதபோது முஸ்லிம் மக்கள் இலங்கையின் பெரும்பான்மையாக இருப்பார்கள் எண்டு சுலோகம் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் என்ன செய்கிறார்கள். எமக்குள் அடங்கி கிடக்கின்ற அந்த ஆன்ம ரீதியான பண்பாட்டை அவர்கள் கிண்டி தூண்டிவிடுகிறார்கள். அதை தூண்டி விட்டதன் பின்பு நாங்கள் எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, எங்களுக்கு கல்வி தேவையில்லை, சாப்பிட உணவு இருக்கிறதா, எங்கள் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை இருக்கிறதா என்பது பற்றியும் அவசியம் இல்லை, எங்களுக்கு தொழில் இருக்கிறதா என்பது அவசியமில்லை, எங்களுடைய பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறதா என்பதும் பிரச்சினை இல்லை, எங்கள் இனத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும் தூண்டிவிடப்படுகின்றன. அந்த அடிப்படையில் எங்களுக்குள்ளேயே அதற்கு தேவையான மேலும் அதிக சுலோகங்கள் உருவாக்கப்படும்.

மதங்களை வைத்து மக்களை பந்தாடும் தலைமைகள்.

கிழக்கில் முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்வார்கள்? நாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவாத சுலோகங்கள் மேலே வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் முகம் கொடுக்க வேண்டுமென்றால் திரு. ஹக்கீமின் கட்சிக்காரர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அங்கும் இது போசிக்கப்படுகிறது. இதேபோல் வடக்கிலும் இவ்வாறானவை போசிக்கப்படுகின்றன. அப்போது இறுதியில் நடப்பது என்ன? ஒரு அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்தார்களா என்ற அடிப்படையில் மக்கள் வாக்களிக்க போவதில்லை. மாறக தங்களுடைய இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு போய் வாக்குகளை கொடுக்கின்றார்கள். இப்படியும் சொல்வார்கள். ‘சாப்பிட இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை எங்களுக்கு ஒரு நாடு இருந்தால் போதும். நமது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டும்..’. இவ்வாறாக எங்களுடைய உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இந்த எங்களுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதை இந்த தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உணர்வுகள் அதிகம் திட்டமிட்டு பரப்பப்பட்டு பின் அது இனவாதமாக உருவெடுக்கிறது. ஆகவே எங்களுடைய நாட்டில் இந்த இன வாதம் என்பது வரும் சாதாரண மக்களுக்கு இருக்கின்ற விடயம் அல்ல. அது ஒரு அரசியலாகும். எங்களுடைய நாட்டின் இனவாதம் என்பது ஒரு அரசியல் இனவாதம்.

சாதாரண பொதுமக்கள் இந்த இனவாதம் இருக்கிறது என்று சொன்னால், எமது நாட்டில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் சிங்கள கிராமங்கள் இடையே பரவி வாழ்கிறார்கள். வடக்கில் மிகப் பெரும் யுத்தம் நடந்து கொண்டிருக்கின்ற பொழுதும் கூட கொழும்பு பகுதியில் பெரும்தொகையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். எனக்கு தெரியும்... அங்கே பாதுகாப்பு கெடுபிடிகள் பரிசோதனைகள் போன்ற பல பிரச்சினைகள் எல்லாம் அவர்களுக்கு இருந்தது. அப்படி அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அங்கு முழுமையான அமைதியான வாழ்வை அவர்கள் வாழ்ந்தார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொதுமக்களிடையே இருந்த இன்வாத்தத்தால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. 1958 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடந்தன. 1983ல் கலவர சம்பவங்கள் நடந்தது உண்மை. ஆனால் நாளாந்த வாழ்க்கையில் பொதுமக்களிடம் அந்த இனவாதம் இருக்கவில்லை. நமது நாட்டில் இனவாதம் என்பது ஒரு அரசியலே. ஆகவே நாங்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கின்ற இந்த இனவாத அரசியலை தோல்விகாணச் செய்ய வேண்டும். இனவாதம் ஒரு அரசியலாக இருக்கிறது என்றால் அதற்கு எதிர்மாறாக இன ஐக்கிய அரசியலை கட்டியெழுப்புவதைத்ததான் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அடுத்து தமிழ், முஸ்லிம் மக்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாக நாட்டிலே வாழ்கின்ற எல்லா மக்களும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு அவர்களும் கொடுக்கிறார்கள். அதே வேளை நாங்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கே உரித்தான தனித்துவமான பிரச்சனைகளும் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமது நாட்டின் பிரதான இரண்டு அரச மொழிகள் தான் சிங்களமும் தமிழும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும். ஒரு கடைக்கு போய் கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தமிழிலே பேசுகிறோமா சிங்களத்தில் பேசுகிறோமா என்பது அந்த வியாபாரியோடு இருக்கின்ற கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விடயம். ஆனால் ஒரு அரசோடு கொடுக்கல் வாங்கல் செய்கின்ற பொழுது தங்களுடைய தாய் மொழியிலேயே அவர்கள் அந்த கொடுக்கல் வாங்கலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். தங்கள் தாய்மொழியிலேயே கொடுக்கல் வாங்கல் செய்யும் அவருடைய உரிமை அங்கு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு தமிழ் குடிமகனுக்கு போலீஸ் நிலையத்திற்கு போய் தன்னுடைய தமிழ் மொழியிலே ஒரு முறைப்பாடு செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், மொழிக்கான உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

அவ்வாறுதான் எங்களுக்கு இன்று நன்றாக தெரியும் ஒரு முஸ்லிம் நபர் போய் ஒரு முறைப்பாடு செய்கின்ற பொழுது அந்த முறைப்பாடு செய்த பின்பு கீழே வாசித்து அறிந்து புரிந்துக் கையெழுத்திடுகிறேன் என்று எழுதப்பட்டிருக்கும். அனால் உண்மையில் அவர் வாசிக்கவும் இல்லை, அறிந்திருக்கவும் இல்லை, அது அவருக்கு புரியவுமில்லை. ஆனால் சிங்களத்தில் எழுதப்பட்டட்ட அந்த முறைப்பாட்டை வாசித்துப் பார்த்து புரிந்து கொண்டேன் என்று முஸ்தபா கையெழுத்து இடவேண்டும். இது சரியா? அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கத்தோடு செயற்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களை அவருடைய சுய தாய்மொழியிலேயே அவர்கள் செய்வதற்கான அந்த உறுதியை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு இருக்கின்ற தடைகளை இயன்றவரை குறைக்க வேண்டும்.

சகலருடைய மத, மொழி, கலாச்சார விழுமியங்கள் மதிக்கப்படல்வேண்டும்.

அடுத்தது, அவர்களுடைய கலாச்சாரத்தில் தனித்துவமான கலாச்சார அடையாளங்கள் இருக்கின்றன. சிலருக்கு தங்களுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்துவது அச்சம் தருவதாக இருக்குமானால் அது பிரச்சினை. என்னுடைய கலாச்சார அடிப்படையில் உடைகளை உடுத்திக்கொண்டு மினுவாங்கொட நகரத்துக்கு போவது ஆபத்தாக அல்லது அச்சம் தருவதாக இருக்கும் என்று அவர் உணர்கிறார்களா இருந்தால் அது ஒரு பிரச்சனை. எனக்கு தெரியும் இவ்வாறான நிலைமைகள் இருக்கின்றன. நான் இப்படி உடுத்திக்கொண்டு போனால் ஆபத்து இருக்கிறது, ஆகவே நான் இப்படி உடுத்திக்கொண்டு போக கூடாது, என்னுடைய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை ஒளித்துக் கொண்டுதான் போக வேண்டும் என்ற உணர்வு ஒருவருக்கு வருவது சரியா? அப்படியானால் என்ன செய்யப்பட வேண்டும்? அவர்களுடைய கலாச்சார பண்பாட்டுக் கலை கலாச்சாரங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சட்டத்தின் மூலம், கல்வியின் மூலம், சமூக கருத்துக்களின் மூலம் அவை பாதுகாக்கப்பட வேண்டும், உறுதிப்படுத்தப்படவும் வேண்டும்.

ஆனால் இந்த கலாச்சார பண்பாடுகள் அல்லது கலாச்சார தனித்துவங்களை நாங்கள் ஏற்றுக் கொள்வது அவை நாங்கள் பிரிந்து இருப்பதற்கான ஒரு காரணி என்ற அடிப்படையிலிருந்து அல்ல. ஒரு தமிழ் சகோதரி நெற்றியிலே வைக்கின்ற பொட்டு தன்னை சிங்களவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதற்கான ஒரு காரணியாக இருக்க வேண்டுமா? சிங்கள சகோதரி உடுத்துகின்ற மேல் நாட்டுப் பண்பாட்டு சேலை கட்டும் முறை தமிழர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு கலாச்சார அடையாளமாக இருக்க வேண்டுமா? ஒரு முஸ்லிம் பெண்மணி அணிகின்ற பர்தா சிங்களவர்களில் இருந்து தங்களை பிரித்து காட்டுவதற்கான ஒரு காரணியாக காட்ட முனைவது தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் எங்களுடைய கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களுடைய அடையாளங்களை விட உயர்ந்தது என்று காண்பிக்க முயற்சிக்கின்றோம். அது தவறானது.

நான் சிங்களவன், நான் தமிழன், என்று காட்டிக்கொண்டு போக வேண்டுமா? நாங்கள் எங்களுடைய கலாச்சார விழுமியங்களை, பண்பாடுகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் அவை காப்பாற்றப்பட வேண்டியது ஏனையவர்களுக்கு அது எதிரானதாக காட்டுவதற்காக அல்ல. 'நான் இப்படி உடுத்திக் கொண்டு ஒரு நிகழ்வுக்கு பொகிறேன், அப்படிப் போய் மற்றவர்கள் மனங்களை நோகப் பண்ணப்போகிறேன்' என்று சொன்னால் அது சரியா? அப்படியல்ல. அந்த கலாச்சார அடையாளங்கள் மற்றவர்களோடு மோதுவதற்காக கடைப்பிடிக்கப்படுவதல்ல.

மூன்றாவது நாங்கள் விரும்பிய மதங்களை பின்பற்றுவதற்கான உரிமை. எந்த ஒரு மனிதனுக்கும் தான் விரும்புகின்ற மதத்தை பின்பற்றுகின்ற ஒரே காரணத்திற்காக அது தனக்கு ஒரு ஆபத்து என்ற உணர்வு வராமல் இருக்க வேண்டும். மதங்கள் என்பது அவரவருடைய நம்பிக்கை. நான் புத்த பகவான் போதித்த தர்மத்தை ஏற்றுக் கொள்கிறேன், நம்புகிறேன். நபிகள் நாயகத்தினால் போதிக்கப்பட்ட தர்மத்தை அவர்கள் பின்பற்றலாம். அதேபோல் கிறிஸ்தவர்களை எடுத்தால் இயேசு கிறிஸ்வினுடைய வாழ்க்கையை அல்லது பைபிளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் என்னுடைய மதம் உன்னுடைய மதத்தைவிட உயர்ந்தது என்று எங்களால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லமுடியாது. அது அவரவர்களுடைய நம்பிக்கை. என்னால் சொல்ல முடியுமா அவருடைய நம்பிக்கை என்னுடைய நம்பிக்கையை விட தரம் குறைந்தது? முடியாது. அது அவருடைய நம்பிக்கை. அது மட்டுமல்ல ஒரு மதத்தை பின்பற்றுவது, அல்லது ஒரு மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதன் மூலம் அவருக்கு கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகள் தடுக்கப்படுமானால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கலாச்சார உரிமைகள், அவருடைய மத வழிபாட்டுக்கான உரிமைகள், அவருடைய மொழிக்கான உரிமைகள் இவற்றை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல்தான் உங்களுக்கு ஒரு உதாரணத்தை நான் சொல்லுகிறேன் திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில்தான் சிலகலமாக அமர்ந்திருந்தார். அவருடைய சில சில அரசியல் கருத்துக்களோடு எங்களுக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நாள் என்னுடைய இரண்டு கரங்களைப் பிடித்துக் கொண்டு இப்படி சொன்னார். ‘அனுர,நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன், ஆனால் நான் இலங்கையில் ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்வதை வெறுக்கிறேன். இந்தக் கருத்து நியாயமானது இல்லையா.

திரு. ஜெயராஜ் பர்ணான்டோ பிள்ளை ஒரு முறை என்னிடம் சொன்னார், அனுர என்னுடைய வாழ்க்கையில் நான் அதிகம் போக கூடியது ஒரு அமைச்சர் பதவிதான், அந்த உயரத்துக்கு நான் சென்று விட்டேன். அவ்வளவுதான் என்று சொன்னார். அவருடைய இனத்துவ அடையாளத்தின் அடிப்படையில் அவருக்கு தோன்றுகிறதா தன்னுடைய வாழ்க்கையில் அடைய கூடிய ஆகக் கூடிய உயரம் இவ்வளவுதான், இவ்வளவுதான் என்னால் அடைய முடியும் என்று. அது நீதியானது அல்ல. அவரால் பிரதம மந்திரியாக வரமுடியுமா ஒரு ஜனாதிபதியாக வரமுடியுமா என்பது வேறு கதை. ஆனால் அவருக்கு அப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால், தான் வழிபடுகின்ற மதம் அல்லது தான் பேசுகின்ற மொழி அல்லது தான் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தின் அடிப்படையில் என்னால் இந்த நாட்டில் ஒரு பிரதம மந்திரியாக வர முடியாது, எனக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக வர முடியாது என்று ஒரு உணர்வு ஏற்படுகிறது என்றால் அது அவ்வளவு நீதியானது அல்ல.

நாங்கள் அவரிடம் போய் 'உனக்கு இப்ப என்னதான் பிரச்சினை' என்று கேட்கலாம். ஆனால், ஒருவருக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது என்றால், தாம் இந்த நாட்டில் என்னதான் இருந்தாலும் ஒரு இரண்டாம் தர பிரஜைகள் என்ற உணர்வு ஏற்படுகிறது என்றாலே அங்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கின்றது அல்லவா? அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கு அரசியலுக்குள், ஆட்சி அதிகாரத்துக்குள், சமூக செயற்பாட்டுக்குள் நியாயமான முறையில் பங்கேற்க அவர்கள் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும். உள்வாங்கப் படுவதற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். (கை தட்டல்)

அவர்களுடைய மத உரிமை, மொழி உரிமை, கலாச்சார உரிமை மட்டுமல்ல, அவருடைய அரசியல் உரிமைகளும் கூட உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம்.

மாகாண சபைகள் அவர்களது உரிமையாக கருதப்படுகின்றபோது நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.

அடுத்தது, இப்பொழுது பேசப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டம், 13 ப்ளஸ், மாகாண சபை போன்றவை தொடர்பாக எங்களுடைய நிலைப்பாடு. நாங்கள் பொதுவாக நம்புகின்ற விதத்தில் மாகாண சபைகள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு அல்ல, என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இன்று அந்த மாகாண சபைகள் என்பது அந்த குடிமக்களின் உரிமையாகி இருக்கிறது. இன்று அந்த மாகாண சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அது அவர்களின் உரிமையாக இருக்கிறது. அது அவர்களினால் வென்றெடுக்கப்பட்ட உரிமையாக கருதப்படுகிறது. அதை இப்போது இல்லாமல் செய்ய முடியாது. அப்படியானால் இப்போது என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மாகாண சபை என்பது தங்களுடைய உரிமை என்று ஏற்றுக் கொள்கிறார்களாக இருந்தால், அதில் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்து அதை அவர்களுடைய உரிமையாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். நாங்கள் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். அது தீர்வா இல்லையா என்பதைப் பற்றி எதிர்காலம் முடிவெடுக்கட்டும். அது அவர்களின் பிரைச்சினைகளைத் தீர்த்ததா இல்லையா என்பதை அவர்களுடன் பேசுவோம். ஆனால் தற்போது அவர்கள் அந்த அமைப்புக்குள் தங்களுடைய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று நம்புகிறார்களாக இருந்தால் அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும். ஆகவே, அவர்களுக்கு அரசியலுக்குள் அரசியல் முறைமைக்குள் நியாயமான முறையில் கலப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது, ஏனைய பொதுவான விடயங்கள். அவற்றில் சில விஷயங்கள் அரசியல் விஷயங்கள். நான் உங்களுக்கு முன்பும் சொல்லியிருக்கிறேன். உண்மையான விஷயங்கள் என்ன? நான் முதல் விடயமாக சொல்ல விரும்புவது, இனிமேல் வடக்கில் எக்காலத்திலும் ஒரு யுத்தம் ஏற்பட போவதில்லை. ஆனால், வடக்கிலே இருக்கின்ற பெற்றொர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதே யுத்தம் செய்வதற்காகத்தான் என்று தெற்கில் ஒரு படத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள். 'மீண்டும் புலிகள் உருவாகுகிறார்கள், புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கிறார்கள்'...அதெல்லாம் நடக்க போவதில்லை. அது ஏன்? யுத்தத்தால் தென்னிலங்கையில் நடந்த வற்றையெல்லாம் நாம் வெறும் சம்பவங்களாக பட்டியலிடலாம். மத்திய மத்திய வங்கியின் மீதான தாக்குதல், எண்ணைக் கூட்டுத்தாபனத்தின் மீதான தாக்குதல், கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டது, பஸ்களில் குண்டுகள் வெடித்தன என்று சம்பவங்களை ஒரு அப்பியாச புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களில் எழுதலாம். ஆனால் வடக்கிற்கு 30 வருடங்களாக யுத்தம் தான் இருந்தது. வடக்கிலே இயக்கங்களுக்கு இடையிலான மோதலும் இருந்தது. இந்திய ராணுவம் வந்தபொழுது யுத்தம் இருந்தது. நாங்கள் வடக்கிற்கு சென்ற பொழுது அவர்கள் எங்களுக்கு காட்டினார்கள். ‘இதோ இது இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பாதிப்பு, இது இலங்கை இராணுவத்தால் சுடப்பட்ட அடையாளம்.’ ஒரே வீட்டில் காட்டினார்கள். ஏன் என்றால் அங்கே 30 வருடங்களாக யுத்தம்தான் இருந்தது. தென் இலங்கையில் யுத்தத்தோடு தொடர்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதுவும் பெரும் பாதிப்புக்களை கொடுத்துத்தான் இருக்கின்றன. ஆனால் வடக்கில் இருந்தது முழு யுத்தம். வடக்கின் தாய் தந்தையர்கள் தங்களுடைய பிள்ளைகளை பெற்று வளர்ப்பது யுத்தத்துக்கு அனுப்புவதற்காக அல்ல. தென்னிலங்கை தாய்மார்கள் தந்தைமார்கள் போலவே அவர்களுக்கு நல்ல கல்வி, நல்ல தொழில் தேடி கொடுத்து, நல்லதொரு திருமண வாழ்க்கையை அமைத்து கொடுத்து, வீடு வாசலைக் கட்டிக்கொடுத்தல் போன்ற எதிர்பார்ப்புத்தான் அவர்களுக்கும் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புக்கான கதவுகளை நாங்கள் அவர்களுக்கு மூடிவைத்திருக்கிறோம். எனவே உண்மையிலேயே அடி மட்டத்தில் வாழும் அந்த தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. அந்த கடந்த 30 வருட கால யுத்தத்தின் காரணமாக வடக்கிற்கு அவ்வாறான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அவருடைய வாழ்க்கைக்கான பல்வேறு வாய்ப்புகள் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன ஆகவே அந்த வடக்கை குறிப்பாக மையப்படுத்தி அந்த மக்களுடைய நாளாந்த வாழ்க்கையை மேம்படுத்தக் கூடியவகையில் மிக வேகமான அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில் அந்த மக்களுக்கு 30 வருட வாழ்க்கை இல்லாமல் போயிருக்கிறது. எனவே நாங்கள் இந்த பிரச்சினையை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். மேற்தளத்தில் அரசியல் பிரச்சினை, அடித்தளத்தில் மக்களின் நாளாந்த பிரச்சினை. இந்த இரண்டுக்கும் தீர்வை பெற்றுக் கொடுப்பது தான் எங்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது. இதையேதான் நாங்கள் வடக்கிலும் சென்று சொல்லுகிறோம் தெற்கிலும் சொல்லுகிறோம். நாங்கள் பல்வேறு வடகிழக்கு அரசியல்வாதிகளோடு கலந்துரையாடி கொண்டிருக்கின்றோம். அவர்களோடு பேசுகிறோம். ‘நாங்கள் 30 வருடமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டோம். இறுதியாக கிடைத்த பலன் என்ன? இன்னும் 30 வருடம் மோதிகொள்வதா? இன்னும் 30 வருடம் சண்டை பிடிப்பதா? அல்லது நாங்கள் சேர்ந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணப்போகின்றோஂமா?’ ஆவே நாங்கள் இவை தொடர்பாக அந்தந்த அரசியல் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

வறுமையில் வாடும் ஒரு குழந்தை இழப்பது ஒரு நேர உணவு மாத்திரமல்ல அதன் சுய கௌரவத்தையும் சேர்த்துத்தான். இதை நான் அனுபவித்தவன்.

அடுத்ததாக மனோரஞ்சன் அவர்கள் கூறிய அடுத்த விடயம். அதாவது மக்களுடைய மனங்களில் இருக்கின்ற அந்த எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக எங்களுக்கு உணர்வு பூர்வமாக புரிதல் இருக்கிறதா என்பதே? எங்களுக்கு மக்களுடைய வேதனைகள் தூக்கம் என்பது ஒரு ஃபேஷன் அல்ல. நாங்கள் வாழ்க்கையின் வேதனைகளை நன்றாக உணர்ந்த மனிதர்கள். ஒரு பிள்ளை வறுமையில் இருக்கும் பொழுது அந்த பிள்ளைக்கு இல்லாமல் போவது வெறும் ஒரு நேர உணவு மட்டுமல்ல. நாங்கள் நினைக்கலாம் ஒரு குடிமகன் ஏழையாக இருப்பதால் ஒரு வேளை உணவு மட்டும்தான் கிடப்பதில்லை என்று…. அப்படி இல்லை. இந்த சமூகத்தில் பல்வேறு விடயங்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றன. ஒரு மனிதன் என்கின்ற கௌரவமும் இல்லாமல் போகின்றது. ஒரு பாடசாலையில் ஆசிரியர் மிகவும் விரும்புவது நல்ல வெள்ளை நிறம் கொண்ட கொழு கொழுன்னு இருக்கும் பிள்ளையைத்தான். வறுமையால் காய்ந்து சுருங்கிப் போன குழந்தையை அல்ல. அவர்கள் கல்வியிலும் ஒதுக்கப்படுகிறார்கள். போலீசுக்கு போய் ஒரு முறைப்பாடு செய்யப் போனாலும் அங்கே போலீசார் நீண்ட நேரம் தாமதிப்பது ஒரு வறுமைப்பட்டவரின் முறைப்பாட்டை பதிவு செய்வதற்குத்தான். ஒரு வங்கியில் போனால் வரிசையில் இறுதியாக நிக்க வைக்கப்படும் ஒருவர் வறுமையானவராகத்தான் இருப்பார்.

எனவே வறுமை என்பது வெறும் பொருளாதார பிரச்சனை அல்ல. அது ஒரு சமூகப் பிரச்சனை. இது நாங்கள் அனுபவப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் அனுபவப்பட்டது. இந்த வறுமை என்பது சாதாரண சமூக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை. எனவே சாதாரண குடிமக்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு அவற்றை அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதைப் போலவே எங்களாலும் அவற்றை உணர முடிகின்றது. மக்கள் எவ்வளவு நம்பிக்கையோடு இந்த நாட்டில் தலைவர்களை உருவாக்கினார்கள், அரசாங்கங்களை உருவாக்கினார்கள். நாட்டில் இரண்டு முறை மக்கள் அந்த சந்தர்ப்பத்தை எமது நாட்டில் தலைவர்களுக்கு கொடுத்தார்கள். அதாவது எமக்குத் தெரிந்த காலத்தில். ஒருமுறை சந்திரிக்காவுக்கு கொடுத்தார்கள். 17 வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை தோற்கடித்து சந்திரிக்கா அதிகாரத்துக்கு வருகின்ற பொழுது மக்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பும் புத்தெழுச்சியும் காணப்பட்டது. ஆனால் சந்திரிகா மிகக் குறுகிய காலத்திலேயே அந்த மக்களின் எதிர்கால எதிர்பார்ப்பையும் புத்தெழுச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். இரண்டாவது கோத்தபாய அவர்களுக்கு 2019ல் சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கையில் அவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபடாத சாதாரண மனிதர்கள் கோத்தபாயவின் மேடையில் ஏறினார்கள். அவ்வளவு காலமும் இலங்கை அரசியலில் அவ்வளவு ஆர்வம் காட்டாத வெளிநாட்டில் வாழ்ந்த இலங்கையர்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதற்காக விமானங்களை வாடகைக்கு அமர்த்தி இலங்கைக்கு வந்தார்கள். மிக பெரிய துறைசார் நிபுணர்கள் கோத்தாவிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். ஆனால் கோத்தாபய ஓரிரு வருடங்களுக்குள்ளேயே அந்த மக்களுடைய எதிர்பார்ப்புக்களை எல்லாம் சிதறடித்தார்.

அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை சிதறடிப்பதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எங்கள் நாட்டின் மக்கள் பாவம். அவர்கள் பாவம்... நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் எவ்வளவு ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்? எவ்வளவு எதிர்பார்ப்புக்களுக்குப் பின்னால் போய் அந்த எதிர்பார்ப்புகள் சீரழிக்கப்பட்டுள்ளன? எனவே எங்களுக்கு அந்த மக்களுடைய உணர்வுகள், எதிர்பார்ப்புகள், அவர்களுடைய இதயத்தில் உள்ள இதயத் துடிப்பு நன்றாக விளங்குகின்றது. அந்த இதயங்களின் வலி அதனுடைய பிரச்சனைகள் எல்லாம் எங்கள் அரசியல் மேடைகளை அலங்கரிப்பதற்கான விடயங்கள் அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசுவது வெறும் பென்ஷனுக்காக அல்ல. நாங்கள் வறுமையைப் பற்றி பேசும்போது எங்களுடைய வாழ்க்கையிலே உண்மையாக நாங்கள் முகம் கொடுத்து அனுபவித்த அந்த உணர்வோடுதான் பேசுகிறொம்.

ஆகவே மனோரஞ்சன் சொன்ன விஷயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் சொல்கிறோம் எங்களுக்கு எந்தவிதமான நியாயமான உரிமையும் கிடையாது அந்த மக்களுடைய அந்த உணர்வுகளை எதிர்பார்ப்புகளை சிதறடிப்பதற்கு. அந்த மக்களை ஒரு சிறிய அளவில்கூட ஏமாற்றுவதற்கு எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. (கைதட்டல்) அது போதும்.. அது போதும்...அந்த மக்கள் பாவம். இல்லையா...? அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள், அரசாங்கத்தை கவிழ்க்கிறார்கள்...எதிர்பார்ப்புகளுடன் பட்டாசு கொளுத்துகிறார்கள், பாற்சோறு உண்கிறார்கள் அவர்கள் என்னதான் செய்யவில்லை..? ஆனால் ஓரிரு வருடங்கள் தான் அவருடைய எதிர்பார்ப்புக்கள் … அவை மீண்டும் சிதறடிக்கப்படுகின்றன. எனவே நாங்கள் நினைக்கிறோம் அந்த மக்களுடைய அடி மனதுகளின் வேதனைகளில் இருந்து வருகின்றன உணர்வுகளோடு எதிர்பார்ப்புகளோடு அரசியலை நாங்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். எனவே நாளைக்கும் உங்கள் முன்னால் வந்து எங்களால இப்படி பேசக் கூடியதாக இருக்க வேண்டும். ஆகவேதான் முதலிலேயே உங்களுக்குச் சொன்னேன் நாங்கள் அந்த நம்பிக்கையை பாதுகாப்போம். ஆகவே நாளையும் உங்கள் முன்னால் வந்து இப்படியே பேசக்கூடிய ஒரு அரசை நாங்கள் உருவாக்குவோம்.

ஆகவே இனப் பிரச்சனை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய கருத்து இதுதான் நன்றி


Read more...

Saturday, March 9, 2024

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.
புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தமது பலமிக்க கோட்டையாக இருந்த வடமராட்சியில் இருந்து, படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டு, இறுதியாக குறிகட்டுவான் கடலடி மட்டும் வந்து இந்தியாவுக்குப் படகேற காத்திருந்தார்கள். விட்டால் யாழ் குடாநாடு முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் நிலை. புலிகளின் கதை முடியும் நேரம்.

அதே நேரம் குடாநாடெங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. இந்தியா படகுகள் மூலம் உணவு எடுத்துவர முயற்சி செய்தது. இந்தியப் படகுகள் உணவுப் பொருட்களுடன் இலங்கையின் கடல் எல்லைக்கு வந்து காத்துக்கிடக்கின்றன. உள்ளே வர இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை. இலங்கை அரசு இந்தியாவின் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. இந்தியா விமானம் மூலம் உணவு போட முடிவு செய்தது. இந்திய போர் விமானங்கள் அத்துமீறி இலங்கையின் வான் பரப்புக்குள் நுழைந்தன.

இந்தியா "ஒப்பிரேசன் பூமாலை" என்ற பெயரில் குடாநாட்டின் சில பகுதிகளில் உணவுப் பொட்டலங்களைப் போட்டு இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. ஜே.ஆர் தன் நிலையில் இருந்து இறங்கி வந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் பிரவேசித்தது.

இந்திய இராணுவ வாகனங்களில் தமது கொடிகளைக் கட்டி, புலிகள் தாமும் அவற்றின் மீது ஏறி வீதிகளில் வலம்வந்தார்கள். பூரண கும்ப மரியாதை செய்து இந்திய இராணுவத்தினரை புலிகள் வரவேற்றார்கள். எல்லாம் சிலகாலம் தான். புலிகள், ஏனைய இயக்க உறுப்பினர்களைத் தேடித்தேடி கொலை செய்தார்கள்.

உத்தேச மாகாணசபை அமைப்பதில் பல சிக்கல்களை உருவாக்கினார்கள். இந்திய அமைதிப்படையை சினமூட்டும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்தார்கள். இந்திய அனுசரணையுடன் , தமிழர்களுக்குத் தீர்வு எதுவும் வந்துவிடக்கூடாது என்ற மேற்குலகின் அபிலாசைக்கு அமைய புலிகள் இந்தியாவுடன் முரண்படத் தொடங்கினார்கள்.

1987 ஐப்பசி மாதம் இந்திய அமைதிப்படை மீது புலிகள் தாக்குதல் தொடுத்தார்கள். அன்றிலிருந்து அமைதிப்படையினரால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களால் மக்கள் இந்தியா மீது வெறுப்புக் காட்டத் தொடங்கினார்கள். இந்த சூழ்நிலையைப் புலிகள் தமக்கு சாதகமாக்க, மக்கள் செறிவாக இருக்கும் இடங்களில், அமைதிப்படை மீது பல தாக்குதல்களை நடத்தினார்கள். அந்த சமயங்களில் அமைதிப்படை எடுத்த நடவடிக்கைகளின் போது பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். உதாரணத்துக்கு யாழ் பொது வைத்தியசாலை சம்பவத்தைக் குறிப்பிடலாம். வைத்தியசாலைக்குள் மக்கள் தாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே, உள்ளிருந்து புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள்.இப்படியாகத்தான் இந்திய எதிர்ப்பு மனநிலை படிப்படியாக மக்களுக்கு ஊட்டப்பட்டது.

இவ்வளவு வருடங்கள் ஓடி முடிந்த பின்னும், மக்கள் மனங்களில் இருந்து இந்த எண்ணத்தை மாற்ற முடியவில்லை. புலிகளின் நச்சுச் சூழலுக்குள் இருந்து மக்கள் மீண்டு வந்து விட்டாலும், சில புலி சார் அமைப்புக்களும், புலம் பெயர்ந்து வாழும் புலிப் பினாமிகளும், அரசியல்வாதிகள் சிலரும், தமிழ் பத்திரிகைகளும் மக்களை மாறவே விடமாட்டார்கள்.

பள்ளிப் பருவத்திலேயே புலிகளுடன் சேர்ந்து, சயனற் என்னும் நஞ்சை காவித் திரிந்த, அப்பாவி மாணவன், பல கொடூரக் கொலைகளின் பங்குதாரி சாந்தனின் இறுதி நிகழ்வுகளில் மக்களை உணர்ச்சியூட்டி, அதில் குளிர்காய பலரும் முயற்சி செய்தார்கள். பல இடங்களுக்கு சாந்தனின் உடலத்தைக் காவித் திரிந்து அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்தார்கள். உச்சக்கட்டமாக வல்வெட்டித்துறை பிரபாகரன் வாழ்ந்த இடத்திலும் சாந்தனின் உடலை வைத்து படம் காட்டினார்கள். இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம், சாந்தன் சாமானியனல்ல. அவன் புலிகளின் முக்கிய உறுப்பினன் என்பதை உலகத்துக்கு குறிப்பாக இந்தியாவுக்கு முகத்தில் அறைந்து சொல்லியுள்ளது.

இவ்வளவு காலமும் சாந்தன் ஒரு அப்பாவி. படிப்பதற்காக இந்தியா சென்ற சாதாரண மாணவன் என்ற புலித் தேசியங்களின் சுத்துக்கள் எல்லாம் போலி என்று நிரூபணமாகிவிட்டது. சாந்தனின் இளைய சகோதரன், அண்ணனின் புலிச் செயற்பாடுகள் பற்றி தனது முகநூலில் பதிவுகள் போட்டுள்ளார். அவர்கள் குடும்பமே அதிதீவிர புலிகளாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், இவர்களின் எச்சரிக்கையால் இந்தியா வெலவெலத்துப் போய் நிற்கிறது. எவை இந்த புற்றீசல் சிவில் அமைப்புக்கள். இந்த அமைப்புக்களின் பெயர் விபரங்களை யாழ்ப்பாண உதயன் பத்திரிகையிடம் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சிறிதரன், சாந்தனின் உடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த தேர்தல் ஒன்றில் தனக்குத்தானே 75க்கு மேற்பட்ட கள்ள வாக்குகள் போட்டதாகப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட சாதனைத் தலைவர், சாந்தனைப் பெரிய தியாகியாக்கி அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை இலங்கை அழைத்து வர பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கிறார் தமிழரசுத் தலைவர். பொன்னம்பலம் கட்சி கஜேந்திரன் உட்பட சிலரும் ஓர் ஓரமாக நின்று அஞ்சலியை செலுத்தி ஒரு சில ஓட்டுக்களுக்கு.....

ஜே.வி.பி கட்சியினரும், கூடவே இலங்கையின் புலனாய்வுப் பிரிவுடன் கூடி இயங்கும் முன்னாள் புலிகளும் இந்தப் பயங்கரவாதியின் உடலுக்கு அஞ்சலி செய்கிறார்கள். ஒன்றுமே புரியலே, இங்கே என்னமோ நடக்குது. ராஜீவ்காந்தியை துவக்கால் அடித்து கொல்ல முயன்ற கட்சியினர், அவரைக் கொன்றவனுக்கு அஞ்சலி செய்வது ஒன்றும் ஆச்சரியமல்ல.

இவ்வளவுக்கும் இந்த சாந்தன் ஈவிரக்கமற்ற பயங்கரக் கொலையாளி. பத்மநாபா உட்பட 12 பேரை கொலை செய்து விட்டு, இலங்கைக்கு தப்பிச் சென்றான். அங்கு தனது தாய் கையால் சாப்பிட்டு உடலைத் தேற்றிக்கொண்டு அடுத்த கொலைக்கான திட்டத்துடன் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறான். அங்கு புலிகளின் கொலைக்குழுவுடன் ஒன்றிணைந்து ராஜீவ்காந்தி மற்றும் 12 பேரை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்கின்றான். இந்தியாவின் ஒப்பற்ற இளம் தலைவனைக் கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு இலங்கைத் தமிழர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்தியாவைத் தூற்றுகிறார்கள். இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார்கள்.

புலிகளின் அழிவுக்குப் பின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு இந்தியத் தயவை வேண்டி நின்ற தமிழர் தரப்பு, ஒரு நொடி தோன்றிய உணர்ச்சி வேகத்தில், இந்திய கனிவை தலைகீழாக மாற்றி வைத்துக்கொண்டுள்ளது. இனப்பிரச்சனைத் தீர்வுக்காக இந்தியாவுக்கு கடிதம் எழுதுவது, இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு புதுடில்லி போவது, அடிக்கடி இந்திய தூதுவர் அலுவலுகத்துக்கு காவடி எடுப்பது, இந்தியாவுக்குப் போவது மகஜர் கொடுப்பது, இந்தியத் தூதுவரிடம் கொடுப்பது என்றிருந்த தமிழ் கட்சித் தலைவர்கள், சாந்தன் என்ற கொலைகாரனுக்காக இந்திய எதிர்பாளர்களாக மாறிக் கொண்டுள்ளார்கள்.

இந்த தமிழ்க் கட்சித் தலைவர்களின் இந்திய விரோத மனப்போக்கு ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனியும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிடம் போய் நிற்கப் போகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்தும் ஆள் மாறி ஆள் மாறி கருத்துத் தெரிவித்துக்கொண்டு, இந்தியா உதவி செய்யவில்லை என எவ்விதம் நீங்கள் ஒப்பாரி வைக்கலாம். இதற்குள் இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை வேறு. இது எப்படி இருக்கிறதென்றால், இந்திய அமைதிப்படை தானாக இலங்கையை விட்டு வெளியேறிய பின், உலகின் நான்காவது பெரிய இராணுவத்தையே அடித்துக் கலைத்து விட்டோம் என்று புலிகள் பீத்திக்கொண்டது போலத்தான்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த இந்திய எதிர்ப்பு மனநிலை நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவே நான் அனுமானிக்கிறேன். போராட்ட ஆரம்ப காலங்களிலேயே (1970 – 1980) இடதுசாரி எண்ணம் கொண்ட பலரும் தமது இந்திய எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வந்து இருக்கிறார்கள். இந்திய விஸ்தரிப்பு தமிழீழத்துக்குப் பாதகம் என வகுப்பெடுத்தவர்கள் பலர். காலப்போக்கில் எல்லோருமே இந்தியாவே கதி என அங்கேயே அடைக்கலமானார்கள்.

1983 இனக் கலவரத்துடன் தமிழ் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோருமே இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் தான். இந்தியா வழங்கிய சகல சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான். இந்திய எதிர்ப்பை பலமாக எடுத்துவந்த புலிகள் முதல் அனைவரும், இந்தியாவிடம் பணம் உட்பட பலவிதமான உதவிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் தான். பிராந்திய அரசியல் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாத, அறிவுகெட்ட ஜடங்களின் சமூகவலைத்தள பதிவுகள், கருத்தாடல்கள், எமது இனத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். இவற்றை எல்லாம் கடந்து, எமது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

யூலியன். 08 03 24.

Read more...

Sunday, February 25, 2024

தீப்பொறி - புதியதோர் உலகம் - தமிழீழக்கட்சி விசாரம்

அமைப்பிற்கு உள்ளே வைக்கப்படவேண்டிய விமர்சனங்களை அமைப்பிற்கு உள்ளேயே வைக்கவேண்டும் . அவற்றிற்கு இடமில்லாதபோது அந்த அமைப்பிலிருந்து விலகி வெளியே வைத்தல் மிகவும் நிதானத்துடன் செய்யப்படவேண்டும்.

தனிமனித ஆளுமையும் அரசியற் தெளிவும் கொண்ட டொமினிக்- கேசவன் - தான் சார்ந்த புளொட் அமைப்பிலிருந்து வெளியேறி அந்த அமைப்பிலிருந்த முரண்பாடுகளை ,குழப்பங்களை ,நெருக்கடிகளை தன் பார்வையில் தீப்பொறி என்ற சிறிய அமைப்பொன்றை உருவாக்கி புதியதோர் உலகம் என்ற நூலைத் தன் பார்வையில் எழுத அதை வெளியிடுவதற்கு என் எல் எவ் ரி , தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கின்றது.

ஹற்றன் நசனல் வங்கியில் என் எல் எவ் ரி கொள்ளையடித்த பணத்தில் இப் புதினத்தை வெளியிட ஆங்கே புல்லுக்கும் பொசிந்ததுபோல் நிதியுதவி கிடைக்கிறது. இந்த நாவலை எல்லா மட்டங்களிலும் கொண்டுபோய்ச் சேர்க்க புலிகள் வேலை செய்கிறார்கள். அப்போது புலிகளும் என் எல் எவ் ரியும் தம் பிரதான எதிர்த்தரப்பாகக் கருதியிருந்தது புளொட் அமைப்பைத்தான்.

தமிழ் நாட்டில் அச்சடித்த நூலைப் புலிகள் தம் படகுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இலங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்து வினியோகிக்கிறார்கள். ஆனால் உயிராபத்தான நெருக்கடிகளை தீப்பொறி அமைப்பினர் எதிர்கொண்டபோது அவர்களுக்கு முதலில் பாதுகாப்பு வழங்கியது புலிகள்தான்.

இப்போது புலிகளின் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்ட தீப்பொறியினரைச் சந்திக்கவரும் இதர அமைப்பாளர்கள் புலிகளின் கண்காணிப்பினுள் வருகிறார்கள். இப்படியிருக்க புளொட்டிலிருந்து வெளியேறியபின் தீப்பொறி அமைப்பினர் தம் கருத்தியல்களை மீள வடிவமைக்க வேண்டியிருந்தது.

தமிழீழம் ,தமிழ்த் தேசியம் இவற்றை முன் மொழியாவிடினும் அதற்கிணையாக ஒரு குறுங்குழுவாத சிந்தனை முறையில் தம்மைப் பாடுபடுத்தி, ஈடுபடுத்தி ,அறியப்படுத்திக் கொண்டார்கள் . இத்தனைய குறுங்குழுவாதச் சிந்தனை முறையின் விருப்பார்வங்களை புதியதோர் உலகத்திலும் காணலாம்.

அந்த நாவலில் ஒரு பாத்திரமாக வரும் ஜான் மாஸ்ரர் கனடாவிலிருந்து எழுதிய எழுத்துக்களில் மோசமாக திரிபாயும் குறுக்கமாயும் இவற்றைக் காணலாம். இந்த நாவல் இத் தீப்பொறிக் குழுவினரை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. முற்றுமுழுதாக தலைமறைவாக இருக்கவேண்டிய நிலையில் புலிகளும் என் எல் எவ் ரி யும் இதன் வினியோகத்தைக் கையேற்றுப் பிரச்சாரப்படுத்திக் கொண்டார்கள் எனப் பார்த்தோம்.

தமிழீழக் கட்சி என்ற பெயரில் தம்மைத் தளமாற்றம் செய்த தீப்பொறியினர் புலிகளின் ஒவ்வொரு செய்கைக்கும் செயலுக்கும் நியாயம் சொல்ல வேண்டியவராயினர். எப்படியெனில் ஒரு சிறு உதாரணம் சொல்லலாம் , மாணிக்கதாசனைக் கிளைமோர் தாக்குதலில் புலிகள் கொன்றபோது பீடை ஒழிந்தது ! என தம் பத்திரிகையில் எழுதிவேண்டிய நிலை வந்தது.

பின்னர் "உயிர்ப்பு" என ஒரு சித்தாந்தக் கோட்பாட்டு சஞ்சிகையை கொண்டுவந்தபோதும் அதற்குள் இருந்த அக முரண்பாடுகளால் அந்த எத்தனமும் இல்லாமலாகி பின் தீப்பொறி ,தமிழீழக் கட்சி, உயிர்ப்பு இவையெல்லாமும் காணாமலானது.

முதற்பதிப்பு 1985 இல் வெளிவருகிறது. தோராயமாக ஆண்டின் இறுதிப்பகுதி எனக் கொண்டாலும் 1986 பிப்ரவரியில் நடந்த தளமாநாட்டிற்கு முன்னரே நூலும் தீப்பொறி அமைப்பும் தயாராகிவிடுகின்றது . இரண்டு மா நாடுகளிலும் கோவிந்தனோ ஜான் மாஸ்ரரோ கலந்துகொள்ளவில்லை.

இந்தா! பிடி ! இந்தா பிடி !
சுடுகுது ,மடியைப்பிடி ! என்ற அவசரக் குடுக்கைத் தனத்துக்கு அவர்கள் தம்மை ஒப்புக்கொடுத்ததில் அவர்கள் செலுத்திய விலை மிக அதிகம் !

இந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தில் புளொட் அமைப்பு மிகப் பலவீனமான நிலையை அடைந்தது. புலிகளின் நோக்கமும் அதுவாயிருந்தது. தாபனத்தைப் பலவீனப்படுத்துவதில் வெளியேயான விமர்சனங்களுக்கு இருக்கும் வலு இதுமட்டும்தான்.

"நீண்டகால மக்கள் யுத்தம் "எனும் கோட்பாடு வலிமைகாண்பதும் இங்குதான். இப்படி இன்னொரு தளத்தில் புலிகளுடன் முரணில்லாத ,விமர்சனங்களில்லாத வகையில் தாம் இயங்கமுடியும் என்ற நப்பாசையில் இருந்தபோதும் ஏற்கனவே மற்ற அமைப்புகளை அழித்தொழித்த திமிரில் 1991 மே மாதம் 17 ஆம் தேதி கேசவனும் அவர் சார்ந்த தோழர்களும் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டு புலிகளால் கொல்லப்படுகின்றனர்.

தமிழீழம் என்ற அதே இலட்சியத்துடனும் கோட்பாட்டுடனும் தீப்பொறி தம் குறுகிய காலத்தில் இயங்கிய போதிலும் 1986 மே மாதம் ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்ட கையோடு தலையெடுத்த தமிழ்ப்பாசிச வகைமை தமிழ்ப்பிரதேசங்களில் இயங்கிய அமைப்புகளை அனைத்தையுமே அழித்தொழித்தது.

ஆனால் புதியதோர் உலகம் 1985 இல் வெளிவருகிறது. புதியதோர் உலகம் வெளிவந்த பின்னரே உடுவிலில் தளமாநாடு நடைபெறுகிறது .அதில் புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணன் , அரசியற்துறைச் செயலர் வாசுதேவா ஆகியோர் கலந்துகொண்டு வைக்கப்பட்ட விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர். தாபனத்தை அமைப்பினுள்ளிருந்து சீர்திருத்துவதற்குப் பதில் அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி தீப்பொறி குழுவாக வெளியேறி புதியதோர் உலகம் நாவலைக் கூட்டுச் சேர்ந்து எழுதிப் பரப்புவதுதான்.

இத்தனைக்கும் கேசவனும் ஜானும் அமைப்பின் அதியுயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் . ஆனால் அமைப்பின் அடிமட்டத் தோழர்களுக்கும் அமைப்பின் வெகுமக்கள் பிரதிநிதிகளுக்கும் இருந்த கடப்பாடு இவர்களுக்கு இருக்கவில்லை. தாம் வெளியேறுவதற்கான நியாயங்களைச் சொல்லும் தூய்மைவாத வெள்ளை அறிக்கையாகத்தான் புதியதோர் உலகத்தைக் கட்டமைத்தார்களேயன்றி தார்மீகப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து அல்ல.

கேள்விப்பட்டவற்றை சுவாரஸ்யமான புனைவாக்கம் செய்தமாறான புதியதோர் உலகம் கதைக்கு உதாரணம் சொல்வதென்றால் பிரான்ஸிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறார் , என்னுடைய குதம் இப்போ எவ்வளவு விரிவடைந்திருக்கிறது தெரியுமா ? எனக் கேட்டபடி அப் பாத்திரம் அறிமுகமாகிறது. நாவலின்படி அப் பாத்திரம் போதை மருந்து கடத்தி அதனால் வரும் பணத்தை அமைப்பிற்குக் கொடுக்கிறது. அப் பாத்திரம் கதையின்படி போதை மருந்து வியாபார நபர்.

ஆனால் உண்மையில் அப் பாத்திரம் காந்தீயம் உள்ளிட்ட அமைப்புகளில் கடுமையாக வேலைசெய்து பொலிஸ் நெருக்கடிகளால் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்து சில தொழில் நிறுவனங்களை அவரது படித்த துணைவியாரோடு உருவாக்கி அதன் வருமானத்தை மிக எளிமையாக வாழ்ந்து அமைப்பிற்குக் கொடுத்து வந்தவர். இதற்காகவே தமக்கென வாரிசு எதையும் ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள்.

போர்க்காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்விற்கு உதவிசெய்து மிகப் பின்தங்கிய தங்கள் பிரதேசத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றுவரை ஆதாரமாய் நிற்பவர். ஆனால் புதியதோர் உலகத்தின் தூய்மையில் ,கேள்விச் செவியில் அவர் ஒரு போதைவியாபாரி. இப்போது லண்டனில் ஒரு நுட்பமான வியாபார நிலை காணப்படுகிறது. புதியதோர் உலகம் விற்பனையை கைத்துணையாகக் கொண்டு புதுவை ரத்தினதுரையை விற்பதில் ஒரு வியாபார அனுகூலம் உண்டு.

தர்க்கத்திலும் திறந்த பார்வை மதிப்பீடுகளிலும் ஒரு விடுதலை அமைப்பினுள் உள்ள உள்முரண்பாடுகளைப் புனைவின் வழியே வெளியே முன்வைத்ததில் இருந்த திறந்தநோக்கு இருக்க புலிகளின் பாசிச அமைப்பு முரண்களை அதற்குள் இருந்து இப்படி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்களா?

மாத்தையாவும் கருணாவும் துரோகிகளாகவே இருந்துவிட்டுப்போகட்டும் !

கவிஞராகவும் அறியப்பட்டு புலிகளின் அறியப்பட்ட பிரமுகராகவும் அதிகாரக் குரலாகவும் இருந்த ஒருவரின் எழுத்துக்களை ,பிரபாகரனின் அணிந்துரையுடன் அவை ஏற்கனவே நூல்களாக வெளிவந்து பாசிச மன நிலையை பொது உளவியலில் கட்டமைப்பதில் பங்குவகித்த ஒருவரின் தொகுப்பை விற்பதில் மனம் கூசாது வந்தவரை லாபம் என்ற வியாபார எண்ணம் நிச்சயம் மாற்றுக்கருத்துகளையும் மாற்று முயற்சிகளையும் ஜனநாயத்தையும் அவாவி நிற்போருக்கு எதிர்காலம் குறித்து அச்சமூட்டவே செய்யும் .

வானத்தைப் பிளந்த கதை எழுதி ஈ பி ஆர் எல் எவ் வை விமர்சித்து ,மன ஆறுதல் அடைந்தபின் செழியன் உதிரியாகிச் சீரழிந்து பின் புலிகளின் பிரச்சாரப் பிரமுகராகி புலிக்கொடியும் பிரபாகரன் கொடியும் ஏந்தித் தன் அந்திமத்தைத் கண்டு , தன் அற உணர்வைக் கைவிட்டதுபோல ,தீப்பொறி முகாமையில் வெளிவந்த "புதியதோர் உலகம் தொட்டு ஒரு புலிச்சாய்வு எடுத்து ஈற்றில் புலிகளாலேயே கொல்லப்பட் டும் சீரழி துயரமும் நிகழ்ந்தது.

வலதுசாரிகளுக்கு அமைப்புகள் பிளவுபட்டு உதிரி அமைப்புகள் உருவாகுவது அவர்களளவில் சேதங்களை உருவாக்காது , ஆனால் இடதுசாரி ,ஜனநாயக ,மக்கள் சார்பு அமைப்புகளில் இருந்தவர்கள் அவ்வவ்வமைப்புகளில் இருந்து வெளியேறும் முடிவுகளை ஆற அமர யோசித்தே எடுக்கவேண்டும் , தம்மை நம்பிவந்த தோழர்களை அப்படியே நடுத்தெருவில் விட்டுவிட்டு தாம்மட்டும் தம் கருத்தியல் தூய்மையையும் தூயதிலும் தூய கரங்களையும் காட்டிக்கொண்டிருக்க முடியாது.

அமைப்புகளிலிருந்து வெளியேறியபின் தம்மைத் தூய்மையாளர்களாக நிறுவ முன்னிறுத்தப்பட்ட நூல்களிற்கும் படைப்பினூடு இலக்கியமாய்க் கதை அமைவில் வெற்றிபெறும் படைப்புகளுக்கும் வேறுபாடுண்டு. அடூர் கோபால கிருஷ்ணனின் "முகாமுகம் " அப்படியாக கலை நுட்பத்திலும் இலக்கியக் கதையாதலிலும் வெற்றிபெற்ற திரைப்படம்.

புளொட் மக்கள் அமைப்பில் அமைப்பாளராயிருந்து பின் தீப்பொறியிலும் இயங்கிய ஆளுமை மிக்க தோழர் ஒருவர் இப்போதும் கொழும்பில் மனநிலை பிறழ்ந்து சிங்கள உறவுகளின் பராமரிப்பில் இருக்கிறார். அமைப்பினுள் இருந்து இயங்கியமட்டிலும் அவர் மிகவும் ஆளுமை மிக்கவராயிருந்தார். அவரது ஆளுமைச் சிதைவிற்கு காரணம் தமிழ்ப் பாசிசம் . போர்க்குணாம்சமிக்க போராளிகள் அரசியல் ,சமூக அரங்குகளிலிருந்து அகற்றப்பட்ட அவ்விடத்தில் வந்தமர்ந்த பாசிசம். இந்த அவலமான சித்திரங்களையெல்லாம் புதியதோர் உலகத்தின் பின்னணியிலிருந்தெல்லாம் புரிந்துகொள்ளமுடியாது.

மேலும் அதே தளத்தில் அமைப்புக் குறித்த விமர்சனங்களோடும் சுயவிமர்சனங்களோடும் தளப்பொறுப்பாளராயிருந்த சின்ன மெண்டிஸ் - விஜயபாலன் - கிட்டுவால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பின்னணியையெல்லாம் புதியதோர் உலகத்தைத் தலைமேற் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்கள் இணையாகப் பேசப்போவதில்லை.

20/05/1989 இல் முள்ளிக்குளத்தில் இலங்கை ராணுவ உதவியோடு புலிகள் 60 க்கும் மேற்பட்ட ஆரம்பகாலப் புளொட் தோழர்களைப் படுகொலை செய்த பின்னணியையும் கூறப்போவதில்லை. "புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி'' என தேசம் நெற் ஜெயபாலன் பொருத்தமாகப் பெயரிட்டிருந்தார். பாசிசத்தின் மனச் சாய்வில் தற்திருப்தி காண்பவர்களுக்கு ,கொள்பவர்களுக்கு புதியதோர் உலகத்தை விட்டால் வேறு போக்கிடமுமில்லை.

புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்:

பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்
புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன்.
பிறப்பு : 1948.5.02 பாலையூற்று, திருகோணமலை.
தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை.
தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா.
கல்வியும் தொழிலும் : தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித வளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலைக் கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.
அரசியல் : பல்கலைக்கழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் மலையகத்திலிருந்து வெளியான “தீர்த்தக்கரை” எனும் அரசியல், இலக்கிய காலண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தார். அப்போது பிரான்சிஸ் சேவியர் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
1980 களின் தொடக்கத்தில் “சங்கப்பலகை ” எனும் குழுவை அமைத்து மாதாந்தம் முக்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடாத்தி வந்தார்.
1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (PLOTE) இணைந்து கொண்டார். 1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார். 1985 இல் PLOT அமைப்பிலிருந்து வெளியேறினார்

பச்சை இனவாதிகள்

டொமினிக்கின் (கேசவன்) வவுனியா வருகையை அடுத்து தோழர் சுனிமெல்லினுடனான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் "தீப்பொறி" செயற்குழு உறுப்பினர்களான டொமினிக்கும்(கேசவன்) நானும் கலந்துகொண்டிருந்தோம். தோழர் சுனிமெல் தனது கருத்துக்களையும், தனக்கு தென்னிலங்கையில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியதோடு "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பும் தனது முடிவையும் கூடவே தெரிவித்திருந்தார்.

தோழர் சுனிமெல்லினுடைய கருத்துக்களை செவிமடுத்த டொமினிக் (கேசவன்) "தீப்பொறி" செயற்குழுவின் முடிவை தோழர் சுனிமெல்லிடம் தெரிவித்தார். அதாவது, சுனிமெல் தென்னிலங்கைக்கு சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவதன் மூலம் அவர் ஒரு இனவாதியல்ல என நிரூபிக்க வேண்டும் என்பதே அம்முடிவாகும்.

டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட "தீப்பொறி" ச் செயற்குழுவின் முடிவைக் கேட்டுக்கொண்டிருந்த தோழர் சுனிமெல் சற்றுப் பொறுமையிழந்தவராக உணர்ச்சிவசப்பட்டவரானார். "அப்படியானால் என்னை ஒரு இனவாதி என்கிறீர்களா?" என அவரால் அடக்கிக்கொள்ள முடியாத ஆவேசத்துடன் எம்மீது கேள்வி எழுப்பினார்.

"இனவாதி என்று நாம் உங்களைக் கூறவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுமாறு தான் கூறுகிறோம்" என டொமினிக்(கேசவன்) தோழர் சுனிமெல்லுக்குப் பதிலளித்தார்.

ஆனால், நாம் தோழர் சுனிமெல்லிடம் கூறிய கருத்து அல்லது செயற்குழுவின் முடிவு எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும்.

"தென்னிலங்கை சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு தோழர் சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்க வேண்டும்" என்பதானது முழுமையான இனவாதக் கருத்தேதான் என்பதை ஒரு பள்ளிச் சிறுவனால் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தகையதொரு கருத்துக்கு நாம் எவ்வளவு தான் கவர்ச்சிகரமாக விளக்கம் கொடுத்தாலும் அதன் சாராம்சம் அல்லது அதன் கருப்பொருள் இனவாதமே தான்.

டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட செயற்குழுவின் முடிவால் தனது பொறுமையை இழந்தவராகக் காணப்பட்ட தோழர் சுனிமெல் "தீப்பொறி"க் குழு குறித்த தனது கருத்தை முன்வைத்தார்.

"நீங்கள் இடதுசாரிகள் அல்ல, பச்சை இனவாதிகள்" என தோழர் சுனிமெல் எம்மை விமர்சித்தார்.

"உங்கள் போன்றவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதைவிட நான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டாலோ, அல்லது ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்டாலோ கூடப் பரவாயில்லை தென்னிலங்கைக்கு செல்கிறேன்" எனக் கூறிய தோழர் சுனிமெல் எம்முடனான சந்திப்பை இடையில் முறித்துக் கொண்டவராய் தென்னிலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
(ஒரு தீப்பொறித் தோழரின் சுயவிமர்சனம் - April 06, 2012 )

புலிகள் தலையெடுத்து முழுச் சமூக சூழ்நிலைகளையும் தம் சமூகப் பாஸிச கொலைக் கலாச்சார நடைமுறையில், கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் கொண்டு வந்த நிலையில் தீப்பொறி ஒரு பெருப்பிக்கப்பட்ட, சக்திவாய்ந்த அரசியல் அமைப்பாக வெளிநாட்டு அரசியல் ஆர்வலர்கள், இயக்கங்களிலிருந்து விலகியும் அதிருப்தி அடைந்து ஒதுங்கியோர் மத்தியிலும் ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருந்தது.

ஆனால் அவர்கள் தம்மையே காப்பாற்றிக்கொள்ள முடியாத, அடுத்தவர் தயவில் அனுசரணையோடு இருக்கும் நிலையில் அவர்களை நம்பி வந்த தென்னிலங்கை சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு எப்படியான தப்பித்தல் வழிகளைக் காட்டி நின்றனர் என்பதற்கு இந்தச் சுய விமர்சனம் ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு அரசியற் தந்திரோபாயம் என்ற அளவிற்கூட இதற்கு எவ்வித பெறுமானமுமில்லை. தீப்பொறியின் அறிவிக்கை ஒரு அரசியற் குழப்பமான சிறு குழுவொன்றின் அனாதைத் தனமான பொறுப்பற்ற பிரலாபம் . அவர்களால் எப்படியேனும் தம்மைத் தகவமைக்க முடியவில்லை. இதில் அடுத்தவரைக் காப்பாற்றிப் பேணும் சால்பிற்கு எங்கு நோக !

அபத்தம் இதழுக்காக சுகன்


Read more...

Tuesday, February 13, 2024

மாவை யின் பொறுத்துக்கொள்ளமுடியாத சுயநலம். சிறிதரனும் சுமந்திரனும் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர். டி.பி.எஸ்.ஜெயராஜ்

கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘ சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார்.

தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது.2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார்.

இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை.

தமிழரசு கட்சியின் மகாநாடு

சுமார் ஒரு தசாப்தகாலமாக ” நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது ” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது.

2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே.

ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது.

பொதுச்செயலாளர்

இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது.

தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார்.

மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர்.

பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை ‘ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர்.

பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம் ‘ என்ற வாக்குகளும் ‘ இல்லை ‘ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன.

சண்முகம் குகதாசன்

செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர்.

சேனாதிராஜா அப்போது “விசித்திரமான ” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார்.

சிறிதரனும் சுமந்திரனும் மாவையின் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர்

சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது.

பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல.

சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார்.

சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா ” கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார்.

சட்டரீதியான நிலைப்பாடு

அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஔிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார்.

அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான நற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே.

ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும்.

இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம்.

ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார்.

மகன் கலையமுதன்

மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார்.

இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுைகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன.

மாவையின் கடந்த காலம்

தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன்.

அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார்.

அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை ” சேனாதி அண்ணை ” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே!

Read more...

Monday, February 12, 2024

இந்தியாவிற்கு ஜேவிபி சென்றது இதுதான் முதற்தடவை அல்ல. இந்திய விரிவாக்க கொள்கை கைவிடப்பட்டு தசாப்பதங்கள்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகியவை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையிலான நேர்மறையான மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடத்தப்பட்டதாக கலாநிதி ஜெய்சங்கரின் சமூக ஊடகப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு அனுராவுக்கு என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதா?

தோழர் அநுரகுமார ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) தலைவராகவும் உள்ளார். அவரின் இந்த சமீபத்திய விஜயமானது அரசியல் ஆய்வார்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டாலும், ஜனதா விமுக்தி பெரமுன இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு செயற்பட்டது இதுதான் முதல் தடவை அல்ல. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யுடன் தொடர்புடையவர்களின் சமூக ஊடகப் பதிவுகள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுரவின் வெற்றியின் சாத்தியப்பாட்டிற்கு இந்தியா அளித்த அங்கீகாரமாக இந்த விஜயத்தை அர்த்தப்படுத்துகின்றன. இதற்கு முன்னர் ஜே.வி.பி.யானது போதுமான அளவு பலமான ஒரு அரசியல் சக்தியாக காணப்படாததாலேயே இராஜதந்திரிகள் அதனுடன் பெரிதாக ஈடுபாட்டைக் காட்டவில்லை. தேசிய மக்கள் சக்தியானது குறிப்பாக கீழ் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகளவு கவனத்தையும், புகழையும், நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளதால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

ரோஹன விஜேவீரவும் நரசிம்மராவை சந்தித்தார்.

நான் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராகவும் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான பொலிட்பியூரோ உறுப்பினராகவும் இருந்தபோதுதான் இந்திய அரசாங்கத்துடன் ஜே.வி.பி.யின் முதல் தொடர்பு ஏற்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் நாங்கள் நல்லுறவைப் பேணி வந்தோம். எண்பதுகளின் தொடக்கத்தில் திரு.நரசிம்மராவ் இலங்கை வந்தபோது, ​​தோழர் ரோகண விஜேவீரவும் நானும் அவரைச் சந்திக்கச் சென்றோம். அந்தக் காலத்தில் "இந்திய விரிவாக்கம்" என்ற கொள்கையை நாம் கைவிட்டிருந்தோம். அது 1972 இலேயே கைவிடப்பட்ட அக்கருத்து 1984 க்குப் பிறகு ஜனதா விமுக்தி பெரமுனாவால் புத்துயிர் அளிக்கப்பட்டது.

பின்னாளில் ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய சோமவன்ச அமரசிங்க போன்ற முன்னணி தோழர்கள் கடும் இந்திய விரோதிகளாக இருந்ததோடு, இலங்கைக்கான இந்திய இறக்குமதிகளை தடை செய்யும் அளவிற்கு சென்றனர். ஆனால் நகைப்பிற்கிடமான காரணம் யாதெனில், தோழர் ஹென்றி விக்கிரமசிங்கவின் தலையீட்டின் மூலம் சோமவன்ச அமரசிங்க இலங்கையை விட்டு தப்பி இந்தியாவிற்குடாவே வெளியேறினார். மிக அண்மையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த தூதர்கள் தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர்களை சந்தித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், புவியியல் ரீதியாக இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதால் குறிப்பிடத்தக்க கலாச்சார, பொருளாதார, வரலாற்று, அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய உறவுகளைப் பேணிவருகிறது. இலங்கை சமூகத்தின் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது. இன்று, இலங்கைத் தீவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேசத் துறையிலும் இது ஒரு சக்திவாய்ந்த நிலையாக மாறியுள்ளது. இந்தியா வல்லரசாக உருவெடுத்ததைக் கருத்தில் கொண்டு, தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் இந்த யதார்த்தத்தை அங்கீகரித்து, இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் அர்த்தமுள்ளது.

"இந்திய விரிவாக்கம்" என்ற கருத்து இனி இல்லை.

அண்மைய ஆண்டுகளில் ஜேவிபி புத்துயிர் பெற்று தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த முன்னணியை ஸ்தாபித்த பின்னர், "இந்திய விரிவாக்கம்" என்ற அரசியல் கோஷத்தை அவர்கள் பயன்படுத்துவதை நான் செவிமடுக்கவில்லை. ஒரு அரசியல் ஆர்வலராக, எனது மாவோயிஸ்ட் காலத்திலிருந்தே தோழர் மாவோ சேதுங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தபோது அவர் முன்வைத்த "இந்திய விரிவாக்கம்" என்னும் கொள்கையுடன் நான் உடன்பட்டேன்.

எனினும், அக்கருத்து இந்திய தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது இலங்கையில் வாழும் மலையக தொழிலாளர்களுக்கோ எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக இந்திய முதலாளித்துவத்தினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல், இலங்கையில் உள்ள தமது முதலாளித்துவ சகபாடிகளுடன் சேர்ந்து மலையக மக்கள் என்னும் காரணியையும் வைத்துக்கொண்டு இலங்கையின் மீது அவர்கள் ஏற்படுத்த முனையும் தாக்கங்கள் என்ன என்பதை பற்றி இலங்கையின் உழைக்கும் மக்களுக்கு போதிக்க நாங்கள் விரும்பினோம்.

இந்திய அமைதி காக்கும் படைகள்

1980 களில், குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதும், இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு ​​ஜே.வி.பி.யின் பலத்த எதிர்ப்பின் பிரதிபலிப்புகள், மற்றும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த பெரும்பாலான பெரிய, சிறிய அரசியல் அமைப்புகள் இலங்கையில் இந்திய தலையீட்டிற்கு எதிரான கருத்தில் இருந்தன என்பதும் இவ்விடத்தில் நினைவுகூரப்படுவது முக்கியமாகும். பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத பிரதிநிதிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் தற்போதைய பிரதமரின் மக்கள் ஐக்கிய முன்னணி (MEP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் அனைத்து மாவோயிஸ்ட் குழுக்களும் இருந்தன.

அதற்கு ஆதரவாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.சி.எஸ் ஹமீட் மற்றும் காமினி திஸாநாயக்க, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி (SLMP), மற்றும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி (CPC) போன்றவர்கள் இருந்தனர். மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி (LSSP). வடக்கு கிழக்கில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) மற்றும் பல சிறிய அரசியல் குழுக்களும் இருந்தன.

அன்றைய அரசின் பிரதமர் ஆர் பிரேமதாச மற்றும் அவரது கட்சியில் உள்ள ஏனையவர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய அமைதி காக்கும் படையை (IPKF) இலங்கைக்கு அழைத்தவர் ஜனாதிபதி ஜெயவர்த்தன. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அமைச்சர் காமினி ஜயசூரிய, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையில் இருந்து விலகினார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரதமர் ஆர்.பிரேமதாச இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான இயக்கத்தின் தலைவராக ஆனார். அவர் IPKF படைகளை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார், இறுதியில் இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார். பிரேமதாச ஆட்சியின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையின் தலைவராக இருந்தார். கொழும்பில் புறக்கோட்டை போதி மரத்துக்கு அருகில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் IPKF இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

13வது திருத்தம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை.

விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் போரை நடத்திக் கொண்டிருக்க, ஜனதா விமுக்தி பெரமுனா தெற்கில் ஆயுதமேந்திய எதிர்ப்பை ஆரம்பித்த நிலையில், ஜனாதிபதி ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க ஆட்சி தனது அரசியல் பிழைப்புக்காக போராடிக் கொண்டிருந்தது. தேசியப் பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரத் தீர்வை உருவாக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசின் ஒப்புதலுடன் இலங்கையில் ஏற்பட்டிருந்த மோதல் நிறைந்த சூழ்நிலையில் இந்திய அரசு இராணுவ ரீதியில் தலையிடும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் நாட்டின் ஒற்றையாட்சி அந்தஸ்து மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரித்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டது. ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தம் இலங்கையின் தேசியப் பிரச்சனையை மேலும் மோசமாக்கியது.

ஆயினும்கூட, அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு தேசிய பிரச்சினையில் இந்தியாவின் முக்கிய நிலைப்பாடு மாறாமல் உள்ளது.

இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக மேலிருந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும். இது இலங்கை மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆலோசனை செயல்முறையின் விளைவாக கொண்டுவரப்பட்டதொன்றல்ல. IPKF இராணுவத்தின் வருகை மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்தியா மேற்கொண்ட தலையீட்டிற்கு எதிராக பல அரசியல் ஸ்தாபனங்கள் காட்டிய எதிர்ப்பை இந்த வகையிலலேயே நாம் புரிந்து கொள்ள முடியும். அதேவேளை இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நீண்டகால நோக்கிலான ஒரு தீர்வை உருவாக்குவதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் எந்தவொரு உண்மையான, நேர்மையான முயற்சிகளையும் எடுக்காததற்காண பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் நிறுவனங்களும் ஏற்க வேண்டும்.

அறுபதுகளில் இருந்த காலம் இப்போது மாறிவிட்டது .

1983 - 1987 காலப்பகுதியில் "இந்திய விரிவாக்கம்" மற்றும் "இந்திய எதிர்ப்பு" போன்ற அரசியலை புரிந்துகொள்ள அக்காலத்தின் உலகளாவிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சொல்நிலைமைகள் பற்றி விவாதிக்காமல் புரிந்து கொள்ள முடியாது. கடந்த காலத்தை மீளப் பார்க்கும் போது அவற்றை நேர்மையாகவும் விமர்சனரீதியாகவும் பார்க்க வேண்டும் எனக் கூறுவதானால், அக்காலத்தில் இருந்த அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளையும் அதே அடிப்படையில் ஆராய வேண்டும். இன்று நாட்டில் நிலவும் விரும்பத்தகாத சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானது. இருப்பினும், இந்த அத்தியாவசியமான பணியைச் செய்யத் தொடங்குவதற்கு எந்த ஒரு அரசியல் நிறுவனமும் அதற்குரிய தைரியத்துடனும் நேர்மையுடனும் இருப்பதாகத் தெரியவில்லை.

1960 களில், ஜே.வி.பி மட்டுமல்ல, ஏனைய அனைத்து மாவோயிஸ்ட் குழுக்களும் 'இந்திய ஆதிக்க விரிவாக்கம்' என்ற கருத்தை ஏற்றுக்கொண்டன. அந்தக் காலங்கள் மாறிவிட்டன. நவதாராளவாதத்திற்கே உரித்தான இயல்பான அகவயமான இயல்பு காரணமாக, அதன் முக்கிய பங்காளிகள் அனைவரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஒருவித் ஆதிக்க விரிவாக்க நிகழ்ச்சி நிரலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அத்ததுடன் நடைமுறை அரசியலில், 1960கள், 1980கள் மற்றும் குறிப்பாக 1987 முதல் 2024 வரையிலான பிராந்திய மற்றும் சர்வதேச அதிகார சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்களை இப்போது கருத்தில் கொள்வது அவசியம்.

சோவியத் யூனியன் தலைமையிலான 'சோசலிச' முகாம் 1989ல் சரிந்தது. சீனா ஒரு புதிய உலகளாவிய இராணுவ மற்றும் பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. இந்தியாவும் ஒரு பொருளாதார வல்லரசாக மாறி, சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய சக்தியா மிளிர இருக்க விரும்புகிறது. எனவே, இப்பகுதியில் சீன, இந்திய தலையீடும், சகிப்புத்தன்மை அற்ற நிலையம் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக ஜே.வி.பி எதனை முன்வைக்கிறது என்பது மேலும் தெளிவுபடுத்தபட வேண்டும்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் மாகாண சபைகள் என்பவற்றுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) எதிர்ப்பு தணிந்துள்ளதாகத் தெரிகிறது. புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் வரை இலங்கையின் அரசியலமைப்பு தளத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக அந்த 13ம் திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்தகைய கட்டமைப்புரீதியான, யாப்பியல் ரீதியான மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் எதுவும் செயல்படுத்தப்படுமா என்பது இன்னமும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அப் பிராந்தியத்தில் இந்தியா வகிக்கும் முக்கிய பங்கை ஜே.வி.பி அங்கீகரித்துள்ளது. எனது பார்வையில், இந்த முற்போக்கான நடவடிக்கைகள் 1980களின் பிற்பகுதியில் அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. இருந்தபோதிலும், தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக ஜனதா விமுக்தி பெரமுன முன்வைக்கும் விடயம் மேலும் விருத்தி செய்யப்பட்டு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் ஆட்சிக்கு வர விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும் முடிந்தவரை பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, குறிப்பாக இலங்கை அரசியலில் இந்தியாவும் சீனாவும் வகிக்கும் சக்திவாய்ந்த பாத்திரத்தின் காரணத்தினால் இந்து சமுத்திரத்தில், இலங்கை மக்களின் நலன்களுக்கு ஆதரவான அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றும் அதே வேளையில், இந்த இரண்டு வல்லரசுகளின் போட்டி நிகழ்ச்சி நிரல்களை எவ்வாறு நிர்வகிப்பது, கையாளுவது என்பதை ஆட்ச்சிக்கு வரும் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது கூட்டணியோ கணத்தில் எடுக்க வேண்டும்.

இது அசாதாரணமானத சூழ்நிலைமை அல்ல.

ஒரு தேர்தல் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இந்திய வருகையை அந்த அடிப்படையிலேயே கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மத்திய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியையும் அதன் தலைவரையும் அழைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய அரசாங்கத்தின் கடந்தகால நடைமுறைகளைப் பொறுத்தவரை இது அசாதாரணமானதும் அல்ல. ஒரு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, தேசிய மக்கள் சக்தியானது தமது கொள்கை உருவாக்கம், சமூக அணிதிரட்டல் மற்றும் பிரச்சாரம் போன்ற துறைகளில் நேரடியாக நுழைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. பிரச்சனைகள், குறைகள், தவறுகள், கடந்த காலத்தை பார்ப்பதை தவிர்த்தல் போன்றவற்றை தமக்குள் கலந்துரையாடல் செய்து நிவர்த்தி செய்துக்கொள்ளல் வேண்டும். எவ்வாறாயினும், இந்த முக்கியமான வரலாற்று சந்தியில், இலங்கையில் உள்ள முற்போக்காளர்கள் மத்தியில் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் ஒட்டுமொத்தமாக முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.

இப்பிராந்தியத்தில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியை கையாளுவதற்கு சீனாவும் அவர்களை அணுகினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கலாநிதி லயனல் போபகே - Dr. Lionel Bopage
ஜேவிபி இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும்1971ம் ஆண்டு நடத்தப்பட்ட இடதுசாரி ஆயுத கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவருமாவார்.

தமிழில் மனோரஞ்சன்


Read more...

Sunday, November 26, 2023

ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024-.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தானே நிதிஅமைச்சர் என்ற வகையில் 2024ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) கிட்டத்தட்ட இதே நாட்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு உரியவை. கௌரவ ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தான் ஜனாதிபதியாக வந்து விட வேண்டும் என்ற விருப்பதிலேயே தனது அனைத்து அரசியல் நகர்வுகளையும் மேற் கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிச்ததே. அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டமும் அதன் ஒரு பிரதானமான பாகமே என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதித் தேர்தல் நோக்கி பரந்துபட்ட மக்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கு அவர் இங்கு சில அறிவிப்புகளை – ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளபோதிலும், அவருடைய விருப்பங்களையும் மீறிய வகையில் இருக்கும் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டே அவற்றை தன்னுடைய இலக்கில் அவர் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் அவர் மேற்கொண்டுள்ளவைகள் மிகச் சிலவே.

1) அரச ஊழியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்று இளைப்பாறுபவர்களாக சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர் இவர்களையும் இவர்களது குடும்ப அங்கத்தவர்களாக உள்ள வாக்காளர்களையும் தனது வாக்கு வங்கியாக உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன், சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு ரூபா 10000 சம்பள உயர்வாக அறிவித்துள்ளார். அதேபோல ஓய்வு பெற்றுள்ளோருக்கு ரூபா 5000 உயர்த்தியுள்ளார்.

2) நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையின் காரணமாக அதிகரித்த வறுமையின் காரணமாக அரசாங்கம் அஸ்வேசும (ASWESUMA) என்னும் விசேட உதவித் திட்டத்தை தொடங்கியது. அதன் கீழ் வெவ்வேறு வகைப்பட்ட சுமார் 17 லட்சம் பேருக்கு ரூபா 2000 தொடக்கம் ரூபா 5000 வரை மாதாந்த கொடுப்பனவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. மிக மோசமான வறுமை நிலையில் உள்ளோரென கிட்டத்தட்ட 60000 பேருக்கு ரூபா 15000 வழங்கி வருகிறது. இப்போது ஜனாதிபதி ரணில் அவர்கள் மேற்குறிப்பிட்ட ஒவ்வொருவருக்குமான மாதாந்த கொடுப்பனவை ரூபா 2500 ஆல் உயர்த்தியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி நாட்டு வாக்காளர்களில் சுமார் 37 லட்சம் பேருக்கு ருபா 2500 தொடக்கம் 15000 ரூபா வரை மாதாந்த முன் கொடுப்பனவுகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். இந்த அதிகரிப்புக்காக 2024ம் ஆண்டு சுமார் 20000 கோடி ருபாக்கள் செலவிடப்பட உள்ளன. இது தேர்தல் தந்திர ஒதுக்கீடா அல்லது நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஈடு செய்வதற்காகவே மக்களுக்கு இந்த ஒதுக்கீடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அரசியல் பொருளாதார அறிவுடையோரால் பகுத்தறிய முடியும்.

சுதந்திரமடைந்த காலம் தொட்டு, குறிப்பாக 1977ம் ஆண்டு தொடக்கம் அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் ஒவ்வொன்றும் மேற்கொண்ட தப்பான பொருளாதார நிர்வாகம் காரணமாக நாட்டின் பிரதானமான பொருளாதார அமசங்கள் ஒவ்வொன்றிலும் பெருகி வந்த நெருக்கடிகள் 2022ம் ஆண்டு ஒரு பெரும் அரசியல் நெருக்கடியாக – பரந்துபட்ட மக்கள் எழுச்சியாக – அறகலய கிளர்ச்சியாக வெடித்தது. நாட்டின் பொருளாதாரம் வங்கிரோத்தானது - அந்நிய நாடுகள் முன்னால் மண்டியிட வேண்டிய நிலைக்கு உள்ளானது. இதையெல்லாம் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கா வெற்றி கொண்டு விட்டார் - நாட்டை நெருக்கடிகளிலிருச்து மீட்டு முன்னேற்றப்பாதையில் செலுத்தி விட்டார் என்றெல்லாம் அவர் பற்றி கூறப்படுகிறது – அவ்வாறு அவரது அரசாங்க சார்பானவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். அவ்வாறு கூறுவது – கருதுவது சரியானதல்ல என்பதை இந்த வரவு செலவுத் திட்டம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

தொடர்ந்து கடனில் மூழ்கும் நாடு
கணக்கு விடும் விக்கிரம சிங்கன்

2022ம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத வங்கிரோத்து நாடென இலங்கையை அரசாங்கம் அறிவித்த நாளிலிருந்து இன்று வரை வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடனின் எந்தவொரு பகுதியும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டுக் கடன்கள் மட்டும் இலங்கையில் தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 65 சதவீதத்துக்கு மேலாகி உள்ளது. உள்நாட்டுக் கடன்களையும் சேர்த்தால் அது 140 சதவீதத்தை அண்மிக்கிறது. 2024ம் ஆண்டுக்கு அரசாங்கம் வட்டியாக கட்ட வேண்டிய தொகை மட்டும் இரண்டு லட்சத்து அறுநூற்று ஐம்பது கோடி (2650 பில்லியன்கள்) ரூபாக்கள். இது 2024ம் ஆண்டில் கிடைக்குமென அரசாங்கத்தின் திட்டமிடப்பட்டுள்ள மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகும். இவ்வாறு வட்டி கட்டும் வீதாசாரம் வருடாவருடம் வேகமாக அதிகரித்துச் செல்கிறதே தவிர குறைவதாக இல்லை.

அபிவிருத்திக்கு மூலதனமில்லை
அலங்காரத்துக்கு அமைச்சர்கள்


2024ம் ஆண்டுக்கான மொத்த செலவீனமாக கிட்டத்தட்ட ஏழு லட்சம் கோடி ருபாக்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க அரசாங்கம் மேலும் சுமார் 2 லட்சத்து எண்ணூற்று ஐம்பது கோடி (2850 பில்லியன்) ருபாக்களை கடன் வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு அனுபவத்தைக் கணக்கிலெடுத்தால், இந்த கடன் வாங்கல் குறைந்த பட்சம் மேலும் 10 சதவீதத்தால் அதிகரிக்கும். அல்லது அரசாங்கம் அபிவிருத்தக்கென ஒதுக்கியுள்ள மூலதன செலவுகளையே திட்டமிட்ட தொகையிலிருந்து குறைக்க வேண்டும். இரண்டாவதே பெரும்பாலும் நடக்கும். ஆக் அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகள் எதுவுமின்றி அரசாங்கம் வெறுமனே 1) அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கூலிகள் கொடுத்தல்,
2) கடன்களுக்கு வட்டி கட்டுதல், மற்றும்
3) சமூக பொருளாதார உதவிகள் என வழங்கப்படும் மான்யங்கள் மற்றும் கொடைகள் கொடுத்தல் என்பவற்றோடு காலத்தை ஓட்டுவதே 2024ம் ஆண்டில் அரசாங்கம்.

அரசாங்க வருமானத்தை திட்டமிடப்பட்டுள்ள அளவுக்கு அரசாங்கத்தால் திரட்ட முடியாது என வரவு செவலவுத் திட்டம் வெளிவந்து சில மணி நேரங்களிலேயே பொருளாதார அறிஞர்கள் கூறி விட்டனர். கடந்த ஆண்டு ஜனாதிபதி திட்டமிட்ட வருமானத்தில் சுமார் 15 சதவீதம் குறைவாகவே திரட்ட முடிந்தது. இந்த வருடமும் அதே அளவு வீதாசாரம் குறைவாகவே அரச வருமானம் அமையும் என்பது நிச்சயமே. அதை ஈடு கட்ட அரசாங்கத்தினால் உள்நாட்டிலிருந்தும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி மேலதிகமாக கடன் வாங்க எந்த வாய்ப்பும் இல்லை. ஒரே வழி செலவுகளைளக் குறைப்பதுதான். நடைமுறைச் செலவுகளைப் பொறுத்த வரையில் இதற்கு மேல் குறைக்க முடியாது. மிகக் கட்டாயமான செலவுகளையே அறிவித்துள்ளது. ஆக, அரசாங்கத்தால் கை வைக்கப்பட உள்ள ஒரே இடம் அபிவிருத்திகளுக்கான மூலதனங்களே.

அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தமது அமைச்சின் மூலம் சாதிக்கப் போவதாக எதனையும் எத்தனையும் சொல்லலாம். அவர்கள் எவருக்கும் திறைசேரியிலிருந்து மூலதனச்செலவுகளுக்காக வெறும் கண்துடைப்புக்காக மிகச் சிறு தொகைகளே கொடுக்கப்படும். பெரும்பாலும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அமைச்சுக்களையே கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான அமைச்சுகளின் 2024ம் ஆண்டுக்குரிய நடைமுறைச் செலவுகளுக்கான ஒதுக்கீடுகள் கூட குறைக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

வயிற்றைக் கட்டி வாழ மக்கள்
தேர்தல் பந்தயத்தில் ஜனாதிபதி

சரவதேச நாணய நிதியம் நான்கு ஆண்டுகளில் 3000 மில்லியன் டாலர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தது. 2023ம் ஆண்டு குறைந்த பட்டம் 1000 பில்லியன் அமெரிக்க டொலராவது கிடைக்கும் என அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 300 மில்லியனோடு நிறுத்தப்பட்டு விட்டது. ஏனெனில் அரசாங்கத்துக்கு அவை விதித்த கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. 2024ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கணிசமான தொகை உதவியைப் பெறுவதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் வழி வகுக்க மாட்டாது என்பது இப்போதே தெரிகிறது. இறக்குமதி தடைகளையும் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் இறக்குமதி செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்து, ஏற்றுமதி வருமானத்தை மட்டும் வைத்து இறக்குமதிச் செலவுகளை சமாளிக்கும் வகையாக வெளிநாட்டு வர்த்தக நிதி நிர்வாக முறையையே இந்த அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.

2021ம் ஆண்டு இறுதியோடு ஒப்பிட்டால், அனைத்து பொருட்களினதம் விலைகள் 100 தொடக்கம் 150 சதவீதம் அதிகரித்தாகவே உள்ளது. இப்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பெறுமதி கூட்டு (VAT வரியினை அரசாங்கம் 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அறிவித்துள்ளது. இது சந்தையில் அனைத்து பண்டங்களினதும் விலைகளை 20 சதவீதம் அதிகரிக்கும். ஏனெனில் பெறுமதி கூட்டு வரியானது விற்பனையாளர்களினூடாக நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வரியாகும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்று வரையில் நாட்டில் மாதாந்த சம்பள அடிப்படையில் ஊதியம் பெறும் ஊழியர்களில் எவரது வருமானமும் 25 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கவில்லை. இந்த வகையில் ரூ.2500, ரூ.5000, ரூ.10000 என மேலாதிகமாக வழங்கப் போவதான அறிவிப்பு வெறும் தம்மாத்துண்டு அளவான வருமான அதிகரிப்பே.

நாட்டு மக்களின் வாங்கும் திறனைக் குறைத்து, இறக்குமதி குறைப்பால் மற்றும் தடையால் நாட்டின் உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் குறைவாக சந்தைகளில் பண்டங்களின் வழங்கலில் (நிரம்பலில்) ஏற்பட்ட வீழ்ச்சியை ஒரு பொருளாதார நிர்வாகமாக கடைப்பிடிக்கும் தந்திரம் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார அணுகுமுறையாக ஆகிவிட்டது. மக்களும் அதனை சர்வசாதாரணமாக கடந்து செல்பவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

தமது கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பான காலத்தை இரண்டு ஆண்டுகள் பின்தள்ளிப் போட ஒத்துக் கொண்டு நாடுகள் மீண்டும் தமது கடனை திருப்பித் தரும்படி கேட்க அடுத்த ஆண்டு தொடங்குவார்கள். அதற்கிடையில் நாட்டின் எந்தெந்த நிலப்பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படப் போகின்றன என்பது தெரியவில்லை. அதற்கிடையில் அடுத்த தடைவை தேர்தல் மூலம் தான் ஜனாதிபதியாக வந்து விட்டால் பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் எனவுள்ள ஜனாதிபதியின் திட்டம்தான் இந்த வரவு செலவுத் திட்டமோ! விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

அ. வரதராஜா பெருமாள்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
17 – 11 – 2023

Read more...

Saturday, November 25, 2023

100 கோடி நஷ்ட ஈடு கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர். யார் இந்த ஷானி அபயசேகர?

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, 100 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பொய் வழக்குகளில் கைது செய்து நீதிமன்ற செயற்பாட்டை முறைகேடாகப் பயன்படுத்தி தன்னை ரிமாண்ட் செய்து தனது சுயமரியாதைக்குக் கேடு விளைவித்தமைக்காகவே அவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் தனக்கு எதிராக தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் விசாரணைகளை மேற்கொண்டதாக திரு.ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகளின் போது கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த ஆகியோர் தமக்கு எதிராக பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு பல்வேறு நபர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக திரு.ஷானி அபேசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பல மாதங்களின் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். வெறுமனே பழி வாங்கும் நோக்கில் தனது சுயகௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்தியமைக்காக 100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஷானி அபேசேகர இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் முன் நிற்கின்ற சாதகமான நிலை யாதெனில், ஷானி அபயசேகர மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என அவரை நீதிமன்று விடுவித்துள்ளதுடன் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸ் என்பவருக்கு அரசு 10 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்று தீர்பளித்துள்ளது.

நஷ்ட ஈடு கோரி வழக்குத்தாக்கல் செய்த உதவி பொலிஸ் பரிசோதகர் மென்டிஸ், மொஹமட் ஷியாம் வழக்கில் குற்றவாளியென மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன விடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அவரை குற்றவாளியாக்குவதற்காக ஷானி அபயசேகரவினால் வைக்கப்பட்டது என சாட்சியமளிக்குமாறு தன்னை கைது செய்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கோரியதாகவும் தான் ஷானி அபயசேகரவிற்கு எதிராக பொய்சாட்சி கூற மறுத்தமையினால் தன்னை விளக்க மறியலில் அடைத்ததாவும் தெரிவித்திருந்தார். இதனை உச்ச நீதிமன்று ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், ஷானி அபயசேகர தன்னை தீயநோக்குடன் கைது செய்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் நீதிமன்றின் முன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றே எடுத்துக்கொள்ள முடியும்.

யார் இந்த ஷானி அபயசேகர?

1986.02.10 இலங்கை பொலிஸ் சேவையில் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்ட ஷானி அபயசேகர சிறந்த துப்பறியும் நிபுணனாக இலங்கையில் அவிழ்கப்பட முடியாது எனக் கருதப்பட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்களின் முடிச்சுக்களை அவிழ்த்ததுடன் குற்றவாளிகளை மோப்பம்பிடித்து கைது செய்தது மாத்திரமல்லாது அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தி தண்டனையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.

துப்பறிதலில் மாத்திரமன்றி நாட்டின் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான சட்டதிட்டங்களையும் கசடறக் கற்றுள்ள இவர் கையில் எடுக்கும் வழக்குகளிலிருந்து குற்றவாளிகள் தப்புவது மிகக்கடினமானது என்பது பொலிஸ் திணைக்களத்தினர் மாத்திரமல்ல குற்றவாளிகளும் அறிந்த விடயமாகும்.

அந்தவகையில், 1999 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி தாக்குதல், 2001 ம் ஆண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், 2005ம் ஆண்டு றோயல் பார்க்கில் யுவதி ஒருவர் தனது காதலனால் மேற்கொள்ளப்பட்ட கொலை விவகாரம், அங்குலான பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை, மொஹமட் சியாம் என்ற வர்த்தகர் பிரதி பொலிஸ் மா அதிபரான வாஸ் குணவர்த்தவின் தலைமையில் கொலை செய்யப்பட்டமை போன்ற பல்வேறு சிக்கலான வழக்குகளை முன்னின்று விசாரணை செய்ததுடன் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக்கொடுக்க அயராது செயற்பட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பின் புறநகர் பிரதேசங்களில் 11 மாணவர்கள் கடற்படையின் ஒரு பகுதியினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை, லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணை, பிரகீத் எகனலியகொட காணமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணை போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் மீதான விசாரணைகளை தலைமை தாங்கி முன்னெடுத்துக் கொண்டிருந்த தருணத்தில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்று 48 மணித்தியாலயங்களுள் ஷானி அபயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதிவியிலிருந்து தூக்கப்பட்டு காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கான பிரத்தியேக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதே நேரத்தில் இலங்கை 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கும் ஷானி அபயசேகரவே தலைமை வழங்கியிருந்தார் என்பதுடன், குறுகிய காலத்தினுள் அவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து உண்மைகளை கண்டறிய அவர் செயற்பட்ட முறையினை பாராட்டி சர்வதேச பொலிஸாரின் தலைவரினால் நற்சான்றுதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com